தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. முடிவுக்கு வரும் 3ஆம் அலை? சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் 22,238 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிச மாதம் பரவ தொடங்கிய ஓமிக்ரான் மெல்ல வேகமெடுத்தது. இதனால் மாநிலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது.
இதையடுத்து மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதனால் வரும் பிப். 1 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1.36 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட 22,238 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,25,940ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னை
மாவட்ட ரீதியிலான கொரோனா பாதிப்பில் இப்போதும் தலைநகர் சென்னையில் அதிகமாக உள்ளது. இருப்பினும், தலைநகர் பல நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 4000க்கு கீழ் குறைந்துள்ளது. இன்று சென்னையில் 3998 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஒரு கட்டத்தில் 30% வரை சென்ற பாசிட்டிவ் விகிதம் இப்போது 18.3ஆக குறைந்துள்ளது.

உயிரிழப்பு
மாநிலத்தில் நேற்று 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று அது 38ஆக குறைந்துள்ளது. அவர்களில் 23 தனியார் மருத்துவமனைகளிலும் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டில் 6 பேரும் திருச்சியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,544 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 2,08,350ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 2,03,926ஆக குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 26,624 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30,84,470ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதமும் இப்போது 17.3ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications