தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் தொற்று.. ஷாக் தரும் 4 மாவட்டங்கள்.. எச்சரிக்கும் நிபுணர்!
சென்னை: தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. பெரிய அளவில் இல்லை என்றாலும் கணிசமாக உயர்ந்து வருவது கடந்த சில நாட்களாக வெளியான புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவிட் டேட்டா அனலாசிஸ்ட் விஜயஆனந்த் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை மே மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்ததைத் தொடர்ந்து கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைய குறைய, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தாலிபானின் உச்சபட்ச தலைவர் கொலை?.. கடத்தப்பட்டாரா துணை பிரதமர் பராதர்?.. என்ன நடக்கிறது ஆப்கானில்?
தமிழகத்தில் கொரோனா
கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகத் தினசரி வைரஸ் பாதிப்பு சில வாரங்களில் 30 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் கீழாக மாறி உள்ளது. ஆனால் 1500 முதல் 1700 என்கிற அளவில் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு நகரங்களில் கொரோனா குறைந்தாலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் சரியவில்லை. 100 முதல் 200 என்கிற அளவில் உள்ளது. அதேநேரம் மெதுவாக மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.
கோவிட் டேட்டா
கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜயஆனந்த் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட பதிவின் படி, தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் புதிய கேஸ்களின் கண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி, 1,52,493 பேருக்கு நடத்திய சோதனையின் முடிவில் 1661 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது1.1 சதவீதம் ஆகும். ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 16984 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 206 பேருக்கும், கோவையில் 211 பேருக்கும், ஈரோட்டில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 111 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வளர்ச்சி குறைவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தினசரி உயர்ந்து வருகிறது. ஆனால் அந்த வளர்ச்சி மெதுவாக உள்ளது. இது புதிய 3வது அலைக்கான போக்கை காட்டவில்லை எனினும் நாம் கோவிட்டுக்கு பொருத்தமான நடத்தை விதிகளை பின்பற்றி நடப்பது நல்லது.
Recommended Video
தஞ்சை முதலிடம்
முன்னதாக கடந்த செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பதிவாகி இருந்தது. இது 40 நாட்களில் அதிகபட்சம் ஆகும். அதற்கு முந்தைய ஏழு நாட்களும் தொற்று அதிகரித்து வந்தது. ஆனால் நேற்று அதாவது திங்கள் அன்று சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 206 ஆக குறைந்துள்ளது. பாசிட்டிவ் ரேட் சென்னையில் 1 சதவீதம் ஆகவே உள்ளது. அதேநேரம் மாநிலத்திலேயே அதிகபட்சமாக தஞ்சாவூரில் 2. 4 சதவீதம் ஆக உள்ளது. கோவையில் 2.1 சதவீதம் ஆகவும், திருப்பூரில் 2 சதவீதம் ஆகவும் உள்ளது.