ஜனவரி 14 முதல் 18ம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் உள்ள கோயில்களுக்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தற்போது கூடுதலாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ஜன. 31 வரை நீட்டிப்பு.. ஜன. 16ல் முழு ஊரடங்கு! கட்டுப்பாடுகள் என்னென்ன?
கூடுதல் கட்டுப்பாடுகள்
அதன்படி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிறு 16-01-2022 அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்கள்
இது தவிர வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல், மற்றும் தைப்பூசம் நாட்களில் பொதுமக்களுக்கு வழிபாட்டுத்தலங்களில் அனுமதி இல்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் & தைப்பூசம்
பொங்கல் மற்றும் தைப்பூச நாட்களில் அதிகளவிலான மக்கள் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். அப்படி ஒரே நேரத்தில் அதிக மக்கள் கோயில்களுக்குச் செல்லும்போது அங்கு கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும். இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதைக் கட்டுப்படுத்தவே பொங்கல் விழா நாட்களில் கோயில்களில் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகள் ஏன்
முன்னதாக கொரோனா பரவல் நிலை குறித்தும் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மருத்துவர்கள் அளித்த பரிந்துரைகளின் பெயரிலேயே இந்தக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தியேட்டர்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியான நிலையில், அதில் தமிழக அரசு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.
கோயில்கள்
முன்னதாக ஏற்கனவே தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலுக்கு வருவோர் 2 டோஸ் வேக்சின் சான்றிதழைக் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை 5 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் கடற்கரைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.