ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.. தமிழக அரசு அதிரடி! மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று அவசியம்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் வீரர்கள் கொரோனா நெகட்டிவ் டெஸ்ட் ரிசல்டு வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
காளைகள் காட்சி பட்டியலில் சேர்க்கப்பட்டதால், ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது, 2017ல் மொத்த தமிழகமும் கொந்தளித்து எழுந்து பெரும் போராட்டங்களை நடத்தியது.
வீடு தேடி வரும் பொங்கல் பரிசு: ரூ. 2500க்கான டோக்கன் விநியோகம் தேதி அறிவிப்பு..!
நிபந்தனைகள்
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அரசு உத்தரவிட்டது. முன்பைவிட எழுச்சியாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பாரம்பரியம்
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் அந்த வீர விளையாட்டில் பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பிரச்சினை
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டுமல்லாமல் பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆகும். ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் தற்போது covid-19 பெரும் தொற்று காரணமாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.
300 பேருக்கு அனுமதி
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப் படுகிறது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்கிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்தவெளியில் அளவுக்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீத அளவுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி கொடுக்கப்படுகிறது.
கொரோனா நெகட்டிவ்
பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் covid-19 தொற்று இல்லை என சான்று பெற்று இருக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்ற அனைவரும் முகக் கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.