தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு.. அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மே 4- ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது.
சிரமம்
எனினும் மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகளை திறக்க ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
அனுமதி
இவற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்திலும் மதுபானக் கடைகளை வரும் மே 7-ஆம் தேதி முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தைகளுக்குட்பட்டு திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.
6 அடி தூரம்
- மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
- ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
- மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
- மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழகத்தில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடல்
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் மதுபானங்கள் கிடைக்காமல் பலர் ஷேவிங் லோஷன், சானிடைசர், கள்ளச் சாராயம் உள்ளிட்டவற்றை குடித்துவிட்டு உயிரை விட்டனர். எனினும் அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க மறுத்தது. இந்த நிலையில் இன்று முதல் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்த தளர்வுகளில் கூட டாஸ்மாக் கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்ற எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.