தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக அதிகரிப்பு.. 2 வருடங்களில் இரண்டாவது அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாக வெளியிட்டது ஒரு அதிரடி அறிவிப்பு என்றால், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது மற்றொரு முக்கிய அறிவிப்பாகும்.
மேஜையை தட்டி வரவேற்பு
இரு அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டபோது, அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்த்தப்பட்டது குறித்து முதல்வர் என்ன கூறினார். இதோ அவரது வார்த்தைகளில் இருந்து நீங்களே பாருங்கள்.
கடந்த வருடம் உயர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம், எனது உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர் ஓய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 என்பது 60 வயது ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் சட்டசபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுத்துறை
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை பணியாளர்களுக்கும் பொருந்தும்.
ஓய்வு பெறும் பணியாளர்கள்
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.
மகிழ்ச்சி
அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான். அதேநேரம், வேலை தேடும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சுணக்கம் ஏற்படும் என்பது இதில் உள்ள நெகட்டிவ் விஷயமாகும். ஏனெனில் 2 வருடங்களில் 2 முறை அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது.