சிறப்பு பஸ்கள் தேவையா.. மொத்தமாக கிராமங்களில் கொரோனா பரவி விடுமே.. மறு பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?
சென்னை: மே மாதம் 24ம் தேதி.. அதாவது நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதேநேரம் சில சலுகைகளை வழங்கியுள்ளது மாநில அரசு. இன்று இரவு 9 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்கலாம், நாளை காலை முதல் இரவு 9 மணி வரை அதே போல இயங்கி கொள்ளலாம் என்று சலுகை தரப்பட்டுள்ளது.
ஆனால் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகு காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் இயங்குவதற்கு அனுமதி கிடையாது.

பஸ் சேவைகள்
அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு சலுகை என்னவென்றால், இன்றும், நாளையும் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து மாவட்டத்தின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்க உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதவிர அரசு பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் உள்ளன.

ஊருக்கு போவார்களே
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒருவாரத்துக்கு பணிகள் எதுவும் இருக்காது. எனவே சொந்த ஊர் சென்று விடலாம் என்று நினைக்கும் வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி அல்லது தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு மொத்தமாக செல்ல இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் பெரிய சிக்கல் எழுகிறது.

பஸ்களில் கூட்டம்
மொத்தமாக பேருந்துகளில் பயணிக்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது. இதன் காரணமாக நோய்த் தொற்று பரவக்கூடும். மேலும் நோய் தொற்று அதிகம் உள்ள நகர்ப்புற பகுதிகளில் இருந்து இவர்கள் கிராமப்புறங்களுக்கு செல்வதால் அங்கும் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். கிராமப்புற பகுதிகளில் சமூக இடைவெளி. முக கவசம் போன்றவற்றை பொது மக்கள் பெரும்பாலும் பின்பற்றுவது கிடையாது. இது ஒரு நகர்ப்புறத்து நோய் என்று தான் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நகரங்களில் இருந்து இப்படி மொத்தமாக சென்று சின்ன சின்ன ஊர்களிலும் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

சமூக இடைவெளி எப்படி?
நகர்ப்புறங்களில் அண்டைவீட்டார், எதிர் வீட்டுக்காரர்கள் உறவினர்களாக இருக்க மாட்டார்கள். சிலர் பழக்க வழக்கம் கூட வைத்துக்கொள்வது கிடையாது. எனவே சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது எளிது. கிராமப்புறங்களில், ஊர் முழுக்க, உறவினர்கள் , தெரிந்தவர்கள் இருப்பர். அவர்கள் நெருங்கி பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விலகிச் சென்றால் அல்லது உறவினர்கள் கோபித்துக் கொள்வார்கள், மனவருத்தம் ஏற்படும். இவ்வாறு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் .

முதியவர்கள் வசிக்கும் கிராமங்கள்
கிராமப்புறங்களில் முதியவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இப்படியான நிலையில்தான் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது , மறுபடியும் பரிசீலிக்கப்பட வேண்டிய முடிவு என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

காய்கறி, பழங்கள்
காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதன் மூலம் நடமாடும் கடைகளை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம்? அனைவருக்கும் இதன்மூலமாக பொருட்கள் சென்று சேருமா என்பதில் குழப்பம் இருக்கிறது. எனவே, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைத்திருப்பது, மேலும் காலை முதல் மாலை வரை அல்லது மதியம் 2 மணிவரை யாவது கடைகளை திறந்து வைக்க அனுமதித்தி கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். இதன்மூலம் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் . இந்த இரண்டு விஷயங்களையும் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications