எமோஷனலான தமிழக மக்கள்.. எங்கும் போராட்டம்.. இந்தி கற்பதில் தவறில்லை.. "ஒன்றிய அரசு" ஓகே- ஆளுநர்
சென்னை: ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. ஆனால் அவமதிக்கும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடந்து வரும் இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ரவி அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இந்த நிகழ்வில் 80 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசுகையில் சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்.

மத்திய அரசு
மத்திய அரசின் மூலம் மத்திய அரசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இந்திய குடிமைப் பணி அதிகாரிகள். இறுதி முடிவு உங்கள் கருத்துக்கு எதிராக இருந்தாலும் அதை அமல்படுத்துவது உங்கள் கடமை என பேசியிருந்தார் ஆளுநர். இந்த நிலையில் இந்த நிகழ்வில் ஒன்றிய அரசு பிரச்சினை குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஒன்றிய அரசு அழைப்பதில் தவறில்லை
அவர் பேசுகையில் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. ஆனால் அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது. ஒன்றிய அரசு என்ற வார்த்தையை கூறி அவமதிக்கும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. ஒன்றிய அரசு என்ற பிரச்சினை தமிழகத்தை தாண்டி வேறு யாருக்கும் தெரியாது. இந்தியா என்பது பல கலாசாரம், பல இனக்குழுக்கள் உள்ள நாடு.

ஒரே இன மக்கள்
ஒரே இன மக்கள் மட்டும் வசிக்கிறார்கள் என்று சொல்லி அந்த பகுதியை அவர்களுக்காக பிரித்து தர முடியாது. தனிமாநிலம் என்பது ஒரு இடத்தில் வசிக்கும் அனைத்து தரப்பின் பெரும்பான்மை கருத்தாக இருக்க வேண்டும். இந்தியை கற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒரு மொழியை கற்பதில் எந்த தவறும் இல்லை. இது அந்த மொழி தெரிந்தவருடன் பணியாற்றும் போது உதவியாக இருக்கும்.

எமோஷனல்
தமிழக மகக்ள் கொஞ்சம் எமோஷனலானவர்களாக இருக்கலாம். எல்லா மாநிலங்களை போல் தமிழ்நாட்டு மக்களும் போராட்டம் நடத்துகிறார்கள். என ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்தார். தமிழ்நாடு, ஒன்றிய அரசு என்ற சொற்களில் மத்திய - தமிழ்நாடு அரசுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் பாதியில் வெளியேறியதை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் ஆளுநர் மாளிகை அருகே போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அது போல் சில கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications