ஏற்றுக்கொள்ள முடியாது.. முதல்வர் ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. தயாராகிறது லிஸ்ட்.. சிக்க போகும் தலைகள்!
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் முக்கியமான லிஸ்ட் ஒன்று தயாராகிக்கொண்டு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வைக்கப்பட்ட புகார்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை செய்தார் .
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசு பொருட்கள் சில இடங்களில் தரமற்று இருப்பதாக புகார் வைக்கப்பட்டது.
அதாவது புளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகில் கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாகவும், மற்ற பொருட்கள் சில தரமற்று இருப்பதாகவும் புகார் வைக்கப்பட்டது.

மீட்டிங்
இது தொடர்பாக கடந்த இரண்டு வாரமாக பலர் புகார் வைத்து வருகிறார்கள். இணையத்தில் பலர் இது தொடர்பாக வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளனர். இது தொடர்பாக வைக்கப்பட்ட புகார்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை செய்தார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது . உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் பல்வேறு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

உத்தரவு
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து முன்பே செய்தி வெளியாகி இருந்தது. அதன்படி கலப்பட பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் மீண்டும் பொருட்களை வாங்க கூடாது. அவர்களுக்கு டெண்டர் விடுக்க கூடாது. அரசு டெண்டர்களில் இருந்து அவர்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே உத்தரவிட்டதாக தகவல்கள் வந்தன.

பொங்கல் பரிசு
இந்த நிலையில்தான் இது தொடர்பாக நீண்ட லிஸ்ட் ஒன்று தயாராகிக்கொண்டு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சீரியஸாக இருக்கிறார். மக்களுக்கு தரமான பொருட்களை வழங்கி அவர்கள் நன்றாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்றுதான் இந்த திட்டமே செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலேயே புகார்கள் எழுந்துள்ளதை அவர் விரும்பவில்லை. இதனால் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
மேலும் தரமற்ற பொருட்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலவசமோ, பரிசு பொருளோ.. இது அரசின் நலத்திட்டம்.. கடமைக்கு பொருள் வழங்க கூடாது. அதிகாரிகள் இதை எப்படி கவனிக்காமல் போனார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மீட்டிங்கில் கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. இதில் சில அதிகாரிகள் கமிஷன் அடித்து இருக்கலாம்.. கமிஷன் வாங்கி தரமற்ற பொருட்களை சில இடங்களில் கொடுத்து இருக்கலாம் என்ற புகாரும் கூட மீட்டிங்கில் முதல்வர் தரப்பிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் டெண்டர் விடப்பட்ட நிறுவனங்களின் லிஸ்டை பொதுவில் வெளியிட அரசு தரப்பு முடிவு செய்துள்ளதாம். இந்த நிறுவனங்கள்தான் டெண்டர் எடுத்தன.. இவர்கள்தான் முறைகேடு செய்தனர். அதனால் இனி அவர்களிடம் பொருட்களை வாங்க மாட்டோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரசு தரப்பு லிஸ்ட் ஒன்றை வெளிப்படையாக வெளியிட இருக்கிறதாம். இது போக சில அதிகாரிகளும் இதில் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் ஆக்சன்
தரமற்ற பொருட்களை சரியாக கவனிக்காமல் அலட்சியமாக இருந்த சில தலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அந்த அதிகாரிகளின் லிஸ்டும் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல்கள் வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்.. எனவே விரைவில் இதில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications