ரஜினி போன்றோர் சொல்லும் விஷயத்தில் கவனம் தேவை.. இல்லாவிட்டால் பொய் காட்டுத்தீ போல் பரவும்- வெதர்மேன்
சென்னை: ரஜினி போன்ற செல்வாக்குமிக்கவர்கள் மக்களிடம் ஒரு கருத்தை சொல்வதற்கு முன்னர் கவனம் தேவை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸால் 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வைரஸ் 3ஆவது நிலையை அதாவது சமுதாய பரவலை தடுக்க என்ன செய்வது என்பது குறித்து நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இது தொடர்பாக திரை பிரபலங்களும் பிரதமரின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
பொய்யான தகவலை சொல்லி பேசிய ரஜினிகாந்த்.. வீடியோவை நீக்கி டுவிட்டர் அதிரடி
வீட்டுக்குள் இருங்கள்
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது வீடியோவில் தமிழகத்தை பொருத்தமட்டில் கொரோனா வைரஸ் 2ஆம் நிலையில்தான் உள்ளது. அது 4 அல்லது 5 ஆவது வாரத்தில் 3 ஆவது நிலையை அடையலாம். அவ்வாறு அடைவது சமுதாய பரவலுக்கு வழிவகுக்கும். எனவே வீட்டுக்குள்ளேயே இருங்கள் என அறிவுறுத்தினார்.
ஆதரவு
அது போல் குஷ்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் இந்த ஊரடங்கிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். இவர்களை போல் ரஜினிகாந்தும் ட்விட்டரில் ஊரடங்கிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவர் வீடியோ வாயிலாகவும் கருத்து மூலமாகவும் ஊரடங்கிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.
ஊரடங்கு
அப்போது அவர் வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 மணியிலிருந்து 14 மணி நேரம் வரை அது பரவாமல் இருந்தாலே 3ஆவது நிலைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி 22-ஆம் தேதி ஜனதா கர்ப்யூ என்ற பெயரில் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளார்கள் என தெரிவித்திருந்தார்.
ஆதாரம் இல்லை
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நல்ல நோக்கத்துடன் ரஜினி அவர்கள் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். எனினும் இவரது கருத்துகள் பொய்யான தகவல் என கருதப்படுகிறது. இது காட்டுத் தீ போல் பரவியது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் சாகாது என்பதுதான் உண்மை. இந்த 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்பதற்கான ஆராய்ச்சிகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
|
பிரதீப் ஜான் அறிவுரை
இதனிடையே ரஜினியின் வீடியோவில் கூறிய கருத்துகள் தவறானவை என்பது குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ரஜினியின் வீடியோ விதிகளுக்கு முரணானது என கூறி அந்த வீடியோவை ட்விட்டரே நீக்கிவிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதீப் ஜான் கூறுகையில் ரஜினியின் வீடியோ படுவேகத்தில் ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டுவிட்டது. பொய்யான தகவல் பரவலை தடுக்க சமூகவலைதளங்கள் படுவேகமாக செயல்படுவது மகிழ்ச்சி. இது போன்ற முக்கியமான நேரங்களில் மக்களுக்கு ஒரு கருத்தை தெரிவிக்கும் முன்னர் பிரபலங்கள் அதுகுறித்த தெளிவாக இருத்தல் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.