பாஜகவில் இணைய போகிறேன்.. போய் பார்த்துட்டு காயத்ரிக்கு பதில் சொல்றேன்.. தாடி பாலாஜி மனைவி நித்யா
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார், எனவே நானும் பாஜகவில் சேர போகிறேன் என தாடி பாலாஜியின் மனைவி நித்யா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் உள்ள சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவருக்கும் தாடி பாலாஜிக்கும் இடையே பல ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நண்பர்கள், வெல் விஷ்ஷர்கள் சமாதானம் பேசி சேர்த்து வைப்பது உண்டு.
ஆனால் மீண்டும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் இனியும் ஒத்து வராது என கருதியே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களது மகள் போஷிகா, நித்யாவிடம் வளர்ந்து வருகிறார்.
மதுரை பெரியார் நிலையம் வேண்டாம்.. மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் : பாஜக தீர்மானம்!
குழந்தைக்கு உரிமை
இந்த நிலையில் அவ்வப்போது குழந்தைக்கு உரிமை கொண்டாடும் சண்டையும் தம்பதியிடையே நடக்கும். அந்த வகையில் குழந்தையை நித்யா பள்ளிக்கு சரிவர அனுப்புவதில்லை என்றும் இதனால் நன்றாக படிக்கும் தனது குழந்தை குறைந்த எண்ணிக்கையிலேயே மதிப்பெண்களை பெற்று வந்தார். மகளை அவ்வப்போது கலைநிகழ்ச்சிகளுக்கு நித்யா அழைத்து செல்வதாகவும் தாடி பாலாஜி புகார் கூறி வந்தார்.
டான்ஸ் ஆடுவது
மேலும் குழந்தை டான்ஸ் ஆடுவதை சமூகவலைதளங்களில் நித்யா பதிவிட்டு வருவதால் அதன் கீழ் நெட்டிசன்கள் போடும் ஆபாசமான கமென்டுகளை படிக்க முடியவில்லை என குமுறினார் தாடி பாலாஜி. இதையடுத்து தனது மகள் போஷிகாவை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அவர் குழந்தை நல ஆணையத்தில் புகார் அளித்தார்.
28 ஆம் தேதி ஒரு பிரச்சினை
இந்த பிரச்சினை அப்படியே இருக்க சென்னை மாதவரத்தில் தங்கியிருந்த நித்யா கடந்த 28ஆம் தேதி இரவு எதிர்வீட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற மணியின் வீட்டில் கல்லை எறிந்து அவரது கார் கண்ணாடிகளை உடைத்துவிட்டார். இதை சிசிடிவி மூலம் உறுதி செய்து கொண்ட மணி, நித்யா மீது மாதவரம் போலீஸில் புகார் அளித்தார். நித்யாவை கைது செய்த போலீஸார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
சிசிடிவி காட்சிகள்
இதையடுத்து தன் மீது சிசிடிவி காட்சிகள் புனையப்பட்டது என்றும் அது தெரியாமல் தன் மீது காவலர்கள் நடவடிக்கை எடுத்தார்கள் என்றும் கூறி நேற்றைய தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நித்யா, கடந்த ஒரு வாரமாக எதிர்வீட்டில் வசிக்கும் மணியுடன் கார் பார்க்கிங் பிரச்சினை இருந்து வருகிறது.
அவதூறாக பேசிய மணி
இதனால் தொடர்ந்து என்னையும் என் குழந்தையையும் இழிவான வார்த்தைகளால் மணியும் அவரது குடும்பத்தினரும் பேசி வந்தனர். மணியின் காரை நான் கற்களால் சேதப்படுத்தியதாக வந்த சிசிடிவி காட்சிகள் புனையப்பட்டவை. துணிவு படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு செல்லும் போது அங்கு சாவி கீழே விழுந்துவிட்டது. அதை தேடி சென்றேன்.
புனையப்பட்ட சிசிடிவி காட்சிகள்
புனையப்பட்ட சிசிடிவி காட்சியை காண்பித்து மணி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னிடம் அதிகபடியான பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். தர மறுத்ததால் எனது பெயரை களங்கப்படுத்த அவர்கள் காவல் நிலையத்தில் பொய் புகாரை கொடுத்துள்ளனர். நான் வசிக்கும் பகுதியில் அதிகாலையிலேயே மது விற்பனை நடைபெறுகிறது. காவல்துறையினர் லஞ்சம் பெற்று இதனை அனுமதிக்கிறார்கள்.
காயத்ரி சொல்வது உண்மையா பொய்யா
9 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மக்களிடையே சீர்திருத்தம் செய்ய முடியாததால் அவர் பாஜகவின் தலைவராக மாறியுள்ளார். எனவே பெண்கள் மேம்பாட்டிற்காக பாஜகவில் இணையவுள்ளேன். அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. நான் பாஜகவில் சேர்ந்து பணியாற்றிய பிறகே எனது அனுபவத்தை வைத்து காயத்ரியின் குற்றச்சாட்டுக்கு பதில் கூற முடியும் என்றார் நித்யா.