திருமண உதவித்தொகை இனி இவர்களுக்கு மட்டும் தான்: அரசு அறிவிப்பு
தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டமான ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
சென்னை: தாலிக்கு தங்கம் திருமண உதவித் தொகை திட்டம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
பாக்கெட் பால் எல்லாம் பால் அல்ல.. பசும்பாலில் உள்ளது தங்கம்... மே.வங்க பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
திருமண நிதி உதவித் திட்டம்
தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவிதிட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
பட்டதாரி பெண்களுக்கு பணம்
இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் இத்திட்டத்துடன் தாலிக்கும் தங்கம் என்ற பெயரில் தங்கம் வழங்கும் திட்டத்தினை கடந்த 2011-ல் தொடங்கி வைத்தார். உயர்கல்வி பயின்ற பெண்களுக்கு 25 ஆயிரமும், பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரமும், இதனுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
என்னென்ன தேவை
தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கம், 8 கிராமாக உயர்த்தப்பட்டது. திருமணத்திற்கு 15 நாளுக்கு முன்னர் மணப்பெண்ணின் பெற்றோர், இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். திருமணம் முடிந்ததும், அதனை பதிவு செய்து பதிவு சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.
பணம் பெறுவதில் தாமதம்
தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் சமூகநல அலுவலர்கள் மூலம் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் மூலமாக பல ஏழை, எளிய மக்கள் மிகவும் பயன்பெற்று வந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் திருமணம் முடிந்த உடன் வழங்கப்பட்டு வந்த பணம் மற்றும் தங்கம் தற்பொழுது 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணம், தங்கம் எதுவும் வழங்கப்படமால் இருப்பது பொது மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பணியில் இருந்தால் தள்ளுபடி
இந்த நிலையில் திருமண நிதி உதவி பெறுவதில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும், அல்லது வேறு ஏதேனும் திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளாரா என்பதையும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம்
மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மனு தள்ளுபடி செய்திட வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருப்பதற்கான வருமான சான்றிதழை அரசு அலுவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமண மண்டபம்
திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் வகையிலும் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசின் புதிய அறிவிப்பினால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும்.