சைக்கிளில் வருவது யாருன்னு பாருங்க.. அடடே, எம்எல்ஏ தமிமுன் அன்சாரி.. கலகலத்த சட்டசபை வளாகம்
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலைவாசி எகிறிப் போய்விட்டது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற மூன்று இலக்கை நோக்கி புலி வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
இதை சுட்டிக்காட்டும் வகையில் சட்டசபை உறுப்பினரும், ம.ஜ.க பொதுச் செயலாளருமான, தமிமுன் அன்சாரி இன்று சட்டசபைக்கு சைக்கிளில் வந்தார். பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சட்டசபைக்கு வந்த தமிமுன் அன்சாரி சைக்கிளை அசத்தலாக ஓட்டியபடி வந்தார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் மீது பதாகை வைத்திருந்தார். இது பார்ப்போரின் கவனம் ஈர்ப்பதாக இருந்தது.
இதனிடையே, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் அறிவிப்பை தமிழக இடைக்கால பட்ஜெட்டில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேகாலயா அரசு கடந்த வாரம், பெட்ரோல், டீசல் மீது தலா ரூ.5 குறைக்க முதல்வர் காம்ராட் சங்மா உத்தரவிட்டார். 12ம் தேதி அசாம் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5 குறைத்து அறிவித்தன. இதனால் இரு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
நேற்று இரவு, நாகாலாந்து அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி ரூ.29 சதவீதத்திலிருந்து 25 ஆகவும், டீசல் மீதான வரி 17.50 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.