அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்...முக ஸ்டாலின் கண்டனம்!!
சென்னை: அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும். அராஜகத்தைக் கண்டித்து திமுக மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, தமிழக காவல்துறை கைது செய்திருப்பதை கண்டிக்கிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா?, அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த தலித் பெண்ணின் பாலியல் வன்கொடுமை, இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு நீதி கேட்டு இன்று திமுக மகளிரணியினர் சின்னமலையில் இருந்து கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர். இந்தப் பேரணியை திமுக தலைவர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ஹத்ராஸ் பாலியல் சம்பவம்... ஆளுநர் மாளிகை நோக்கி...திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி!!
பேரணி திமுக மகளிரணி தலைவரும் எம்பியுமான கனிமொழி தலைமையில் நடந்தது. பேரணி துவங்கிய சில நிமிடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், கனிமொழிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கனிமொழி மற்றும் மகளிரணியினர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிய பின்னர், வேனை நகர விடாமல் திமுகவினர் தடுத்தனர்.
இதனால், அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. சைதாப்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் திமுக மகளிரணியினர் கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேரணி துவக்கி வைத்து ஸ்டாலின் பேசியபோது மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சிகளை சரமாரியாக சாடிப் பேசி இருந்தார். உத்தரப்பிரதேசத்தில் அப்பாவி இளம்பெண்கள் 4 பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். உத்தரப்பிரதேசம் இன்று ரத்தப்பிரதேசமாக மாறிக்கொண்டு இருக்கிறது; இதை தடுக்க வேண்டும் என்று என்று முக ஸ்டாலின் பேசி இருந்தார்.