வனப்பகுதியில் ஒரு இன்ச் நிலத்தை கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது.. தமிழ்நாடு அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றத்தில் மனு
பிரபாகரன் தனது மனுவில் கூறி இருப்பதாவது:- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளது. பறவைகள் மாயமாகி வருகின்றன. நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நடுவட்டம் கிராமத்தில் உள்ள மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருகிறார்.
வனநிலம் ஆக்கிரமிப்பு
அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்துள்ளனர். வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளனர். இதுசம்பந்தமாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வனப்பகுதியில் கட்டுமான பொருட்கள் வைக்க தடை விதிக்க வேண்டும். வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்
வனப்பகுதியை ஆக்கிரமித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும். . இவ்வாறு பிரபாகரன் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது
அப்போது தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாட்டில் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும். இதுசம்பந்தமான வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.