"ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை" - ஒரே போடாக போட்ட சீமான்!
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு என்ன தான் பிரச்சினை இருக்கிறது என்றும், மாநிலங்களுக்கு ஆளுநரே அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்திற்கு மாற்றாக தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது.
இதை ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஏற்கனவே அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதால், இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஈரமான ஈரோடு.. டெல்டாவில் சூரியன் சுளீர்! ரெஸ்ட் எடுக்கும் மழை - அடுத்து என்ன? வெளியான வானிலை அப்டேட்
காலாவதியான அவசர சட்டம்
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரத்தில் சில சந்தேங்கள் எழுப்பிய ஆளுநர் அதற்கு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டார். தமிழக அரசும் உடனடியாக விளக்கங்களை அனுப்பியது. ஆனாலும் ஆளுநர் இந்த சட்ட மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக கடந்த மாதம் 1 ஆம் தேதி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகியுள்ளது.
ஆளுநரே அவசியம் இல்லை
இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஆளுநரே அவசியம் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அதற்கு தடை செய்யும் மசோதாவிற்கு கையெழுத்திடுவதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை. ஆளுநருக்கு மக்கள் நலன் மீது அக்கறை இல்லையா..
எட்டு கோடி மகக்ளுக்கு என்ன மதிப்பு
மக்களால் தேர்வு செய்யபப்ட்ட ஒரு ஆட்சி மக்களின் நலனுக்காக ஒரு முடிவு எடுக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு ஆளுநர் அதற்கு கையெழுத்திடாமல் தடுக்கிறார் என்றால் இதெல்லாம் என்ன கொடுமை. எட்டு கோடி மகக்ளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது. மக்களாட்சி, ஜனநாயகம் இங்கே எங்கு இருக்கிறது?" என்றார். ஆளும் திமுக தவறான பாதையில் செல்கின்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பினர்.
அனைத்தையும் தனியாருக்கு கொடுத்ததை
இதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது: அவர்கள்(பாஜக) சரியான பாதையில்தான் போனார்களா.. திமுக சரியான பாதையில் போகவில்லை. அதை நாங்க கேட்கிறோம். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இதுவரை 9 ஆண்டுகளில் நீங்கள் எதில் சரியாக போயிருக்கிறீர்கள். அனைத்தையும் தனியாருக்கு கொடுத்ததை தவிர வேற என்ன வேலை செய்து இருக்கிறீர்கள். மக்களை எப்போதும் பதற்றத்தில் வைத்திருந்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை.
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும்..
பாஜக ஆளும் மற்ற மாநிலங்கள் எல்லாம் சரியான பாதையில்தான் செல்கிறதா? இலவசம் வேண்டாம் என்று தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பது நாங்கள்தான். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பெயர்தான் அரசு. இலவசம் என்பதும் ஒருவிதமான கையூட்டுதான். தேர்தல் நேரத்தில் அறிவிப்பீர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லாமல் கொடுக்க வேண்டும். ஆளுநரே நாட்டுக்கு தேவையில்லை. அண்ணாவின் கோட்பாடுப்படி ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் அவசியம் இல்லை.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி
தமிழகத்தில் பட்டப்பகலில் கொலை,கொள்ளை எல்லாம் நடக்கிறது. நீங்கள் கேட்கும் நிலையில்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற விவகாரத்தை பொருத்தவரை அது அவர்கள் கட்சி, ஆட்சி, அவங்க முடிவெடுப்பாங்க..கொடுப்பாங்க..இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
ஆட்சி மாறும், அமைப்பு மாறாது
புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்க்கிறோம் என்று சொன்னார்கள். ஆளும் கட்சியாக இருக்கும் போது இல்லம்தேடி கல்வி வருகிறது. அது புதிய கல்விக்கொள்கையில் இருக்கிறது. எட்டு வழிச்சாலையை எதிர்த்தால் நேர குறைப்பு சாலை என வருகிறது. இங்கே ஆள் மாறும் ஆட்சி மாறும். அமைப்பு மாறாது. அதே ஊழல், அதே லஞ்சம், அதே திருட்டு,அதே கொள்ளை என எல்லாம் நடக்கும். அதனால்தான் இந்த இரண்டு ஆட்சிகளையும் மாற்ற வேண்டும் என்கிறோம்.