மு.க.ஸ்டாலினை தலைவரே என அழைத்த முதல் குரல்... அன்றே தலைவர் பட்டம் சூட்டிய அன்பில் பொய்யாமொழி..!
சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அவரது ஆருயிர் நண்பரான அன்பில் பொய்யாமொழியின் 21-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினை வாய் நிறைய தலைவரே.. தலைவரே என எப்போதும் அழைத்த அன்பில் பொய்யாமொழி இன்று இல்லை.
ஆனால் அவர் அழைத்ததற்கேற்ப திமுகவின் தலைவராகி இரண்டு ஆண்டு காலத்தை நிறைவு செய்து இன்று 3-ம் ஆண்டு பயணத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்.
Exclusive: எடப்பாடியார் இதை முதலில் செய்யட்டும்... நான் பாராட்டு விழா நடத்துகிறேன் -கொங்கு ஈஸ்வரன்
தொடரும் நட்பு
திமுகவின் மூத்த முன்னோடியான அன்பில் தர்மலிங்கம் குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நட்பானது தலைமுறைகளை கடந்தது. அந்த வகையில் அன்பில் பொய்யாமொழிக்கும், மு.க.ஸ்டாலினுக்குமான நட்பை திமுகவினர் அனைவரும் அறிவர். குடும்பம், கட்சி, அரசியல், என பலவற்றையும் ஒளிவுமறைவின்றி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருவருடைய நட்பு திகழ்ந்தது.
கூலிங் கிளாஸ்
அன்பில் பொய்யாமொழியை பொறுத்தவரை ஒல்லியான தேகத்துடன் ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் காணப்படுவார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள இல்லத்திற்கு தன்னை சந்திக்க வருபவர்களை வாஞ்சையுடன் வரவேற்று, அது காலை நேரமாக இருந்தால் சாப்பிட்டு விட்டு செல்லவேண்டும் என உரிமையுடன் கண்டிப்பு காட்டுவார். கவுன்சிலராக இருந்தாலும் சரி அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி எல்லோரையும் ஒன்றாக பாவிக்கக் கூடியவர்.
எப்போதும் சிரிப்பு
அன்பில் பொய்யாமொழியிடம் இருந்த சிறப்பு என்னவென்றால், ஏற்றத்தாழ்வு கருதாமல், பணம் - பதவி - சாதியை பார்க்காமல் தன்னை நாடி வருபவர்களிடம் உரிமையுடன் தோளில் கை போட்டு பேசுவார். இது உதவியை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுக்கும். சிடு சிடு வென்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்போதும் புன்னகை மன்னனாக வலம் வந்தார்.
திமுக இளைஞரணி
திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்ட போது அதன் வளர்ச்சிக்காக ஊர் ஊராக மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருடன் அந்தப் பயணங்களில் பங்கெடுத்தவர் அன்பில் பொய்யாமொழி. தந்தை அமைச்சராக இருந்தும், மு.க.ஸ்டாலினுடன் தனக்கு மிக நெருங்கிய நட்பு இருந்தும் என்றும் எளிமை விரும்பியாகவே வாழ்ந்தார். இன்று உயிருடன் இருந்திருந்தால் திமுகவில் பொருளாளராகவோ, பொதுச்செயலாளராகவோ ஆகியிருப்பார்.
முதல் நபர் பொய்யாமொழி
மு.க.ஸ்டாலினை இன்று எல்லோரும் தலைவர் என அழைத்தாலும் அன்றே அவரை தலைவரே.. தலைவரே என வாய் நிறைய அழைத்தவர் அன்பில் பொய்யாமொழி. அவர் அழைத்த தலைவர் பதவியை அவரது நினைவு நாளான ஆகஸ்ட் 28-ம் தேதி அன்றே ஸ்டாலினும் பொறுப்பேற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலின் தலைவர் பதவியேற்று இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அவரது ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழியின் 21-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.