தக்காளியை பதுக்கினால் நடவடிக்கை.. அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு.. விலை குறையும் என அமைச்சர் உறுதி
சென்னை : தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு
மழை காரணமாக தக்காளி விலை 120 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வு
தமிழ்நாட்டில் கடந்த ஒருமாதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே 2 முறை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மண்டலாமாக மாறி தன்னுடைய சுயரூபத்தை காட்டிவிட்டு சென்றுள்ளது. தற்போதைய சூழலில் வங்கக் கடலில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆனால் அது புயலாக மாற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
ஆறுகள் நிரம்பின
மண்டலம் புயலாக மாறாவிட்டால் என்ன புயல் வந்தால் என்ன சேட்டைகள் செய்யுமோ அனைத்தையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் செய்துவிட்டு சென்றுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஏரிகள், குளங்கள், ஆறுகள் நிரம்பின. கூவம் ஆறு முதல் காவிரி ஆறு வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் ஏரிகள் உடைந்ததால் கன்னியாகுமரி ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் தத்தளித்தன.
வாகனங்களுக்கு பாதிப்பு
இதனால் விவசாய நிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிவருவதில் வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. கனமழை காரணமாக விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் முறையாக காய்கறிகள் விநியோகம் செய்யமுடியவில்லை. கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் சரக்கு வாகனங்கள் சென்னை போன்ற நகரங்களுக்கு வரமுடியவில்லை.
தக்காளி விலை ரூ.120
இந்நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சம் 120 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ கத்தரிக்காய் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கத்திரிக்காய் ரூ.107, குடமிளகாய் ரூ.232, காளிபிளவர் ரூ.90, முருங்கைக்காய் ரூ.120 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி பதுக்கினால் நடவடிக்கை
இந்நிலையில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அதை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், தக்காளி பதுக்கப்படுகிறதா என கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரத்து குறைவு காரணமாக தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
காய்கறி உற்பத்தி அதிகரிப்பு
மேலும் தனது பேட்டியில், உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்றுவருவதாக தெரிவித்த அமைச்சர் உழவர் சந்தைகளுக்கு அருகே உள்ள பகுதியிலே காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.