கமிஷனரே விசாரித்தும் பலனில்லை: ஆய்வாளரால் அவமானம் தான் மிச்சம் கலங்கும் காவலர் குடும்பம்
தீபாவளி நாள் ஊரெங்கும் சந்தோஷமாக செல்ல காவல்துறையில் 24 ஆண்டுகள் காவல்துறையில் ஒரு கெட்டப்பெயரும் எடுக்காத ஒரு கண்ணியமிகு தலைமைக்காவலரின் குடும்பம் சொந்த போலீஸ் துறையில் உள்ள ஒரு ஆய்வாளரால் அவமானப்பட்டு கூனிக்குறுகி அரசு மருத்துவமனையில் நின்ற நிலை கடந்த நவ 4 அன்று ஒருகுடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது. கமிஷனரிடம் பாதிக்கப்பட்ட காவலரின் மனைவி கதறி அழ நான் நடவடிக்கை எடுக்கிறேன் அம்மா கலங்காதீர்கள் என கமிஷனர் உத்தரவிட்டும் இதுவரை ஒரு துரும்பும் அசைவில்லை என கண் கலங்கி கூறுகின்றனர் காவலர் குடும்பத்தார்.
உன் கணவரின் மேலதிகாரி எல்லாம் இருக்கும்போது என்னிடம் ஏனம்மா வந்தாய் என கண்ணீருடன் நின்ற அந்தப்பெண்ணை கனிவுடன் விசாரித்துள்ளார் கமிஷனர் சங்கர் ஜிவால். அய்யா எங்கள் குடும்பத்தின் மூத்தவராக உங்களைப்பார்க்கிறோம், உங்களால் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும் என்று கண்கலங்கியுள்ளார் அந்தப்பெண். அழாதேம்மா நடந்ததைச் சொல்லு என்று காவல் ஆணையர் கூற அவர் நடந்ததை கூறியுள்ளார்.
ஐயா என் கணவரை இந்த ஒருவார காலமாக ஒரு நிமிடம் கூட பிரியாமல் பார்த்துக்கொள்கிறேன் காரணம் அவர் தற்கொலை செய்துக்கொள்வாரோ என்கிற பயம். தீபாவளி அன்று சந்தோஷமாக கழிய வேண்டிய இரவு என் தங்கைகள், அவர் கணவர், என் மகள் முன் என் கணவர் குற்றவாளி போல் அடித்து இழுத்துச் செல்லப்பட்டதும், நாங்கள் அவதூறான வார்த்தைகளால் திட்டு வாங்கியதும் இதுவரை வாழ்க்கையில் நாங்கள் பார்க்காத நாள். என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் சொந்தத்தொழில் செய்பவர்கள்,
வசதியானவர்கள் ஆனால் எங்களை மதிக்க காரணம் என் கணவர் காவல் துறையில் இருக்கிறார் என்கிற எண்ணம் ஆனால் அது காவல்துறையாலேயே அவமானப்படுத்தும் நிலைக்குப்பின் அவர் தான் ஏன் உயிர் வாழ வேண்டும் என தினம் தினம் தற்கொலை மனோபாவத்தில் இருக்கிறார் என்று கூறி இதற்கு காரணமான ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன் அம்மா கலங்காமல் போய் வாருங்கள் என காவல் ஆணையர் அனுப்பி வைத்துள்ளார்.
போலீஸ் மீது நம்பிக்கை உள்ளது, மாணவர் போராட்டம் தேவையில்லை..தற்கொலை செய்த கரூர் மாணவியின் தாய் பேச்சு
ஆய்வாளர் அத்துமீறினாரா?
அந்தப்பெண் அவ்வளவு கலங்கி காவல் ஆணையரை சந்திக்கும் நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது, நடந்தது இதுதான் இதை புகாராக குமாரதேவன் மனைவி காவல் ஆணையரிடம் அளித்துள்ளார், அதன் விபரமே இது. சென்னை காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவில் தலைமைக்காவலராக பணியாற்றுபவர் குமாரதேவன்(48). இவரது மனைவி பாரதி (43). இவர்கள் ராயப்பேட்டை காவல் எல்லையில் உள்ள லாயிட்ஸ் சாலை, கோகுலம் காலனியில் வசிக்கின்றனர்.
தீபாவளி அன்று வழக்கம் போல் பாரதியின் தங்கைகள் குடும்பம் ஒன்றாக குமாரதேவன் வீட்டில் கூடியுள்ளனர். மாலையில் வீட்டு வாசலில் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் பட்டாசுகள் வெடிக்க குமாரதேவனின் குடும்பத்தினர் குழந்தைகளும் பட்டாசு வெடித்துள்ளனர். வீட்டிலுள்ள பெண்கள் அதைப்பார்த்தபடி இருந்துள்ளனர்.
குமாரதேவன் வீட்டுக்குள் உறவினர்களுடன் பேசியபடி டிவி பார்த்துக்கொண்டிருந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பட்டாசு வெடித்தது போதும் என அனைவரையும் உள்ளே அழைத்துள்ளார். அப்போது மூன்று காவல்துறை ஜீப்கள் வரிசையாக வந்து நின்றுள்ளது. அதிலிருந்து திருடனைப்பிடிப்பது போல் போலீஸார் இறங்கி ஓடி வந்துள்ளனர். வரும்போதே லத்தியை சுழற்றியபடி அவதூறாக திட்டியபடி போலீஸார் இறங்கி ஓடிவந்துள்ளனர்.
சோகம், அவமானத்தில் முடிந்த நல்லநாள்
இதனால் பயந்துப்போன பெண் குழந்தைகள் அலறியபடி வீட்டுக்குள் ஓடியுள்ளன. இதைப்பார்த்த குமாரதேவன் என்ன சார் குழந்தைகள் தானே நல்ல நாள் அதுவுமாக லத்தி, அவதூறான வார்த்தைகளை பெண்களைப்பார்த்து பேசுகிறீர்களே, நேரம் கடந்துவிட்டது போன்னு விரட்டினால் முடித்துக்கொள்ளப்போகிறோம் என்று கேட்டுள்ளார். நீ யார் என அந்த கும்பலிலிருந்த ஆய்வாளர் பிரேம் ஆனந்த் கேட்டுள்ளார்.
நானும் போலீஸ் தான் சார் சிசிபியில் இருக்கிறேன் என்று குமாரதேவன் சொல்ல ஓ அதனால் தான் திமிரா என்று குமாரதேவனை கண்டபடி அவதூறான வார்த்தைகளால் திட்டிய இன்ஸ்பெக்டர் இவனை இழுத்து வண்டியில் ஏற்றுங்கள் என சொல்லி வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றியுள்ளனர். சார் அவர் என்ன தப்பு செய்தார், பட்டாசு வெடித்தது குற்றம் என்றால் வழக்கு போடுங்கள் நல்ல நாள் அதுவுமா டிபார்ட் மெண்ட் ஆளையே இப்படி இழுத்துச் சென்றால் என்ன நியாயம் என மனைவி கேட்க அவரையும் திட்டி, பலப்பிரயோகம் செய்து தள்ளிவிட்டு குமாரதேவனுடன் ஜீப் பறந்துள்ளது.
உறவினர்கள் முன் அவமானப்படுத்தப்பட்ட தலைமைக்காவலர்
ஸ்டேஷனுக்கு போவதற்குள் குமாரதேவன் தாக்கப்பட்டதாக காவல் ஆணையருக்கு அளித்த புகாரில் மனைவி தெரிவித்துள்ளார். ஸ்டேஷனிலும் அவதூறான வார்த்தைகளால் கண்டபடி திட்டி மனைவி உறவினர்கள் எதிரில் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக மனைவி பாரதி புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எல்லோரும் கெஞ்ச அவர்களிடம் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு இதை வெளியில் சொன்னால் அவ்வளவுதான் என மிரட்டி அனுப்பியுள்ளார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த்.
வீட்டுக்கு வந்த குமாரதேவன் யார் முகத்தையும் பார்க்க முடியாமல் அவமானத்தால் கூனிக்குறுக அவர் உடல் நிலையைப்பார்த்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். நான் ஏன் உயிர்வாழ வேண்டும் என குமாரதேவன் பிதற்றியபடி இருக்க அவர் தற்கொலை செய்துக்கொள்ளப்போகிறார் என்கிற பயத்தில் இதுவரை தனியாக விடவில்லை என காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் குமாரதேவன் மனைவி கூறியுள்ளார்.
புகார் காவல் ஆணையர் உத்தரவுக்குப்பின் சிசிபி அடிஷனல் கமிஷனர் பார்வைக்கு போனதாகவும், அதன் பின்னர் துணை ஆணையர், உதவி ஆணையர் என போயுள்ளது. ஆனால் காவல் ஆணையரே உத்தரவிட்டும் இதுவரை ஒரு சிறு நடவடிக்கைக்கூட இல்லை என்பதால் அக்குடும்பம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
ஒரு போலீஸ்காரர் என்பதால் தானே அடுத்தடுத்து புகார் செய்ய முடியாமல் வேலையைக்காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், இதையே ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவருக்கு அந்த ஆய்வாளர் செய்திருந்தால் மனித உரிமை ஆணையம் வரை புகார் பறந்திருக்கும், காவல்துறையில் கண்ணியமாக கடமையாற்றி கவுரவமாக வாழ்ந்து வந்த ஒரு காவலருக்கு காவல்துறை அதிகாரியால் ஏற்பட்ட அவமானத்திற்கு இதுவரை பரிகாரம் இல்லை, இதுதான் காவல் குடும்பமா? என கண்ணீருடன் கேட்கிறார் குமாரதேவன் மனைவி பாரதி.
போலீஸ் மீது போலீஸ் புகார் அளிப்பதால் நடவடிக்கை எடுப்பதில் தயக்கமா?
இங்கு நமக்கு எழும் கேள்வி, பட்டாசு வெடிப்பவர்கள் குறிப்பிட்ட நேரம் தான் வெடிக்கவேண்டும் என்று சொன்னாலும் போலீஸார் தீபாவளி அன்று நீக்கு போக்காக கண்டும் காணாமல், சில இடங்களில் லேசாக கண்டிப்புடன் கலைந்துப்போகச் சொன்னதைத்தான் நடைமுறையில் பல காவல் நிலையங்களில் பார்க்க முடிந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் அது கொடூரமாக மாற என்ன காரணம்.
அனைவருக்கும் குடும்பம் உள்ளது, நல்ல நாளில் சாதாரணமாக விரட்டி விட்டு செல்லலாம் கேட்காவிட்டால் அதிகப்பட்சம் வழக்கு போடலாம் அவ்வளவே. ஆனால் காவல் துறையில் பணியாற்றும் தலைமைக்காவலரை குற்றவாளிபோல் அடித்து இழுத்துச் சென்று ஸ்டேஷனில் நிற்க வைத்து அவமானப்படுத்தி அனுப்பும் காரணம் என்ன?
காவல்துறையில் பணியாற்றிய தலைமைக்காவலருக்கே இந்த கதி என்றால் சாதாரண பொதுமக்களுக்கு இந்த காவல் ஆய்வாளரிடம் என்ன நியாயம் கிடைக்கும், பெண்களை கண்ணியக்குறைவாக பேசினால் பெண் வன்கொடுமைச் சட்டம் வரை போட சட்டத்தில் இடம் உண்டு. ஆனால் கண்ணியக்குறைவாக பேசியும், மேன் ஹேண்ட்லிங்கும் செய்துள்ளவர்கள் மீது அந்தப்பெண் புகார் அளித்தால் சட்டம் பாய வழி உள்ளதே.
காவல் குடும்பங்களின் மூத்த அண்ணன் முதல்வர் ஸ்டாலின்
காவல் துறையில் பணியாற்றும் ஒருவருக்கு காவல்துறை அதிகாரியாலேயே அவமானம் நடந்ததை காவல் ஆணையர் பார்வைக்கு கொண்டுச் சென்றும் நடவடிக்கை வரவில்லை என்றால் அந்த ஆய்வாளர் செல்வாக்கு மிக்கவராக இருக்கவேண்டும், அல்லது புகாருக்கு அவ்வளவுதான் மதிப்பு என்று கருத வேண்டும். நாங்கள் கேட்பது நியாயம், குறைந்தப்பட்சம் துறை ரீதியான விசாரணை அதுவும் இல்லை என்றால் நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது. கடைசிவழி எங்கள் துறை அமைச்சர் மூத்த அண்ணன் முதல்வர் ஸ்டாலினிடம் தான் என்று குமுறுகிறார் பாரதி. நியாயம் கிடைக்குமா பார்ப்போம்.