சமையல் எரிவாயு விலை மீண்டும் 25 ரூபாய் உயர்வு: தமிழகத்தில் காஸ் சிலிண்டர் விலை ரூ.900ஆக அதிகரிப்பு
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது.
ஒரே ஆண்டில், அதாவது 9 மாதங்களில், நாட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 285 ரூபாய் உயர்ந்துள்ளது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது, தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1831.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலைகள்
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வர ஆரம்பித்தது முதல் விலை ஏறிக்கொண்டே போகிறது. இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மாதம், 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.

கிடுகிடு விலையேற்றம்
கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபயாக இருந்த சிலிண்டரின் விலை ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி, 875 ரூபாய் 50 காசாக அதிகரித்தது. இன்று சமையல் சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது.

மக்கள் அதிர்ச்சி
இன்று முதல், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவது மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கண்டனம்
சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ட்விட்டரில் உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளது. மோடி அரசின் சாதனை... பொதுமக்கள் வேதனை... மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரு. 25 உயர்வு...!!!. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரு. 285 உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications