பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து வழங்காவிட்டால் பொதுமக்களுக்கு அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: துப்புரவு பணியின் போது பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் இனி கட்டாயம் பிரித்து வழங்க வேண்டும். அவ்வாறு பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியை குப்பை இல்லாத நகராக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை வகை பிரித்து வாங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளது. இந்த பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு, 5,400 டன் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் சேகரிக்கிறார்கள்.
இப்படி வழங்கப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் குப்பைகளும் சேர்த்து தான் மக்களால் வழங்கப்படுகிறது. ஆனால் இனி துப்புரவு பணியின் போது பிளாஸ்டிக் கழிவுகளை இனி கட்டாயம் பிரிந்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வரைவினை வெளியிட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீது, இது மக்கக்கூடியது, இது மறுசுழற்சி செய்யக்கூடியதென அச்சிட்டிருக்க வேண்டும். தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தனிநபர்கள் தங்கள் வசிப்பிடத்தில் பிளாஸ்டிக்கை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொது இடத்தில் எரித்தால் 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் பிளாஸ்டிக் கழிவை துப்புரவு செய்யும் போது பிரித்து வழங்காவிடில் தனிநபருக்கு 100 ரூபாய் முதல், 5ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications