21 மாவட்டங்களில் கொரோனா குறைகிறது, 4 மாவட்டங்களில் மட்டும் சவால் -முக்கிய தகவல் கூறிய ராதாகிருஷ்ணன்
சென்னை : தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது எனவும், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் சவாலாக உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் படிப்படியாக நோய் தொற்று குறையத் தொடங்கியுள்ளது எனவும், 21 மாவட்டங்களில் நோயின் பரவல் குறைந்துள்ளது என கூறினார்.
குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் தினமும் குறையும் கொரோனா தொற்று.. சென்னையில் எத்தனை பேருக்கு பாதிப்பு?
4 மாவட்டங்கள் சவால்
கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்கள் சவாலாக உள்ளது எனக் கூறிய ராதாகிருஷ்ணன், இந்த மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது கூறினார். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் மற்றும் மருத்துவமனைகள் என 2 லட்சத்து 11 ஆயிரம் நபர்கள் சிகிச்சையில் உள்ளனதாகவும், 7% பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்தார்.
தடுப்பூசி எண்ணிக்கை
கடந்த ஜனவரி 1 முதல் 26 வரை கொரோனா பதிக்கப்பட்டு இறந்தவர்களில் 91% பேர் 50 வயதுக்கு மேற்ப்பட்டோர் என தெரிவித்த அவர், 70% பேர் தடுப்பூசியே செலுத்தாதவர்கள் அல்லது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எனவும், , 93% பேர் இணை நோய் உள்ளவர்கள் எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வர என வேண்டுகோள் விடுத்தார். மேலும், சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நோய்த்தொற்று குறைந்து வருவதாக பேசிய ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
புது வகையான கொரோனா பரவி வருகிறது என சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்ப வேண்டும் எனக் கூறிய சுகாதாரசெயலர் ராதாகிருஷ்ணன், கட்டுப்பாடுகள் மட்டும் தீர்வு தராது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடித்து முக கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே கொரோனா பரவலை குறைக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தளர்வுகள் தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என கூறிய ராதாகிருஷ்ணன், கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் சற்று சவாலாக உள்ளது என்றும் தொற்று குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், பொதுமக்கள் இப்போது உள்ள ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கினால் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.