ஆகா இப்படி ஒரு நல்ல போலீசா? காவல் நிலையத்தில் நூலகம் - முன்மாதிரியாக திகழும் தேனி சின்னமனூர் போலீஸ்
தேனி: சின்னமனூரில் உள்ள காவல்நிலையம் வரும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏராளமான புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையம் என்றாலே தீண்டத்தகாத இடம் என்ற மனநிலை நம் மக்களிடம் இருந்து இன்னும் மாறவில்லை.
பரவுகிறது கொரோனா.. இந்த 5 மாநிலங்களும் உஷாராக இருக்க வேண்டும்.. மத்திய அரசு எச்சரிக்கை
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லி போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் ஆங்காங்கே சில போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறுகள் மற்றும் அத்துமீறல்களால் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதே பழி விழுகிறது.
முன்மாதிரி காவல் நிலையம்
இத்தகைய சூழலில்தான் மற்ற காவல்நிலையங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையம். காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான உறவை ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையிலும் நூலகம் ஒன்று காவல் நிலைய வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
700-க்கும் மேற்பட்ட நூல்கள்
இனி சின்னமனூர் காவல்நிலையத்துக்கு நீங்கள் சென்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் கவலை வேண்டாம். அங்குள்ள நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். காவல்நிலையத்தின் இந்த நூலத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 700-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இனி சின்னமனூர் காவல்நிலையத்துக்கு நீங்கள் சென்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் கவலை வேண்டாம். அங்குள்ள நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். காவல்நிலையத்தின் இந்த நூலத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 700-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு உதவ நூலகம்
இதுகுறித்து காவல்நிலையத்தின் ஆய்வாளர் சேகர் தெரிவிக்கையில், "இப்பகுதியில் நூலக வசதி இல்லாததால் இதை அமைத்து இருக்கிறோம். இந்த காவல்நிலையத்தை சுற்றிலும் 8 உயர்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 15 பள்ளிகள் உள்ளன. எனவே மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் வைத்திருக்கிறோம். அதேபோல் செய்தித்தாள்களும் இதழ்களும் இங்குள்ளன.
காவல் நிலையத்துக்கு மக்களை வரவழைக்க வேண்டும்
மாணவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களும் காவல் நிலையத்தை புகாரளிப்பதற்கான இடமாகவும், குற்றவாளிகளை கையாள்வதற்கான இடமாக மட்டும் பார்க்கக்கூடாது. இதை அவர்களுக்கான இடமாக ஆக்க வேண்டும். இளைஞர்கள் மனதை நல்ல திசையில் வழிநடத்துவதும் போலீசின் கடமை. இங்குள்ள நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக அவர்கள் நல்வழிக்கு செல்வார்கள்." என்கிறார் நம்பிக்கையுடன்.
எப்படி வந்தது இந்த ஐடியா?
காவல்நிலைய வளாகத்தில் பயன்பாடில்லாத பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு அறையை பார்த்தவுடன் அதில் நூலகம் அமைக்கலாம் என்ற யோசனை காவல் ஆய்வாளர் சேகருக்கு தோன்றி இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷிடம் சேகர் தெரிவிக்க அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட புத்தகங்களை சிறுக சிறுக சேமித்து இந்த நூலகத்தை அமைத்திருக்கிறார் சேகர்.
20 பேர் அமர்ந்து வாசிக்கலாம்
700 புத்தகங்களை கொண்ட இந்த நூலகத்தில் ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து வாசிக்க முடியும். தினசரி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நூலகத்தை பயன்படுத்தலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கான புத்தகங்கள் இங்கு அதிகம் இருப்பதால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம் மற்ற நூலகங்களை போல புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்க அனுமதி வழங்குவதில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
குற்றவாளிகளுக்கு புத்தகம்
இனி வரும் காலங்களில் குற்றவாளிகளை புத்தகம் படிக்க அனுமதிக்கலாம் என பரிசீலித்து வருவதாகவும், அதன் மூலம் அவர்களின் மனநிலை மாற்றமடைய வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர் அதிகாரிகள். இந்த நூலகத்தின் வாயிலாக ஒருவராவது போட்டித் தேர்வுகளின் வெற்றிபெற வேண்டும் என்பதே தனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு என்று கூறுகிறார் ஆய்வாளர் சேகர்.