சண்டையும் இல்லை.. ஒன்னும் இல்லை.. ஒரே பேட்டியில் வாயடைக்க வைத்த ஓபிஎஸ்
சென்னை : நீங்களும், எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், எங்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். உங்களது பார்வையில் தான் தவறு உள்ளது என்றார்.
Recommended Video
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவின் சார்பில் ஓ பன்னீர்செல்வம் மூன்றாவது நாளாக நிவாரண பொருட்களை இன்றும் வழங்கினார்.
சென்னை . தி.நகர், அண்ணாநகர், எழும்பூர், ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் காசிமேடு துறைமுகத்தில் மீனவர்களை சந்தித்து மழையால் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். பின்னர் மீனவப் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

படகுகள் சேதம்
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஓ பன்னீர்செல்வம், "மழை வெள்ளத்தால் அனைவருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காசிமேட்டில் 20 படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சென்னையில் இன்னும் சில இடத்தில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சென்னை வெள்ளம்
அதிமுக அரசின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் சென்னையில் தற்போதைய மழைக்கு வெள்ளம் தேங்கியதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக அரசு பெரும் நடவடிக்கை எடுத்ததால் தான், தற்போது பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து சென்னை தப்பியது என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி
நீங்களும், எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், நானும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவதால், எங்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். மக்களை சந்திப்பது தான் முக்கியம். இதில் பாரபட்சம் என்பது உங்களது பார்வையில் தான் தவறு உள்ளது என்றார்.

முற்றுப்புள்ளி
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே பிரிவினை இருப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வத்தின் இன்றைய பேட்டி அமைந்து இருந்தது. இதன் மூலம் சுமூகமாக செல்வதையே ஓபிஎஸ் விரும்புவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications