“நீங்க அரவிந்த் கெஜ்ரிவாலா? இல்ல அரவ்'இந்து கெஜ்ரி'வாலா?” திருமாவளவன் கேள்வி
சென்னை: இந்தியாவின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மத்திய அரசு அதனை மீட்டெடுக்க முயன்று வருகிறது. இதற்கிடையில் ரூபாய் தாள்களில் இந்து தெய்வங்களின் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று வலதுசாரிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதே கோரிக்கையை முன்வைத்தார்.
இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், அரவிந்த் கெஜ்ரிவாலை, அரவ்'இந்து கெஜ்ரி'வால் என்று அழைத்திருக்கிறார்.
“அப்பன் பெயர் தெரியாதவர்” என அர்த்தம்.. கொந்தளித்த திருமாவளவன் - அப்படி என்ன சொன்னார் ஆளுநர் ரவி?
புதிய யோசனை
இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஆளும் பாஜக மீது பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். ரூபாயின் மதிப்பை மீட்டெடுக்க பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் யோசனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதிய யோசனை ஒன்றை முன் வைத்துள்ளார்.
கடவுள் படங்கள்
அதாவது, "புதியதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுக்களில் லஷ்சுமி மற்றும் விநாயகர் ஆகிய கடவுள்களின் படங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன். நாம் முயற்சிகளை மேற்கொள்ளும்போது சில நேரங்களில் கடவுளின் ஆசி இல்லையென்றால் அந்த முயற்சி வெற்றியடையாது. என புதிய ரூபாய் நோட்டுக்களில் ஒருபுறம் காந்தியும் மறுபுறம் இந்து பெண் கடவுள்களின் படமும் இடம்பெற்றிருக்க வேண்டும். இது நாட்டின் வளங்களை அதிகரிக்கும். பொருளாதாரத்தை உயர்த்தும். இது தொடர்பாக நாளை மறுநாள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன்" என்று கூறியுள்ளார்.
பாஜக=ஆம் ஆத்மி
அவர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு எதிராக தன்னை காட்டிக்கொள்ளும் ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. தற்போது குஜராத் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இக்கருத்து அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கருத்து பாஜகவின் கருத்து என்றும், ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லையென அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கேள்வி
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, "அரவ்'இந்து கெஜ்ரி'வால். ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது.. குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங் பரிவார்களின் அரசியல் தாக்கமா? அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங் பரிவார்களைத் தணிக்கும் தன்னல சூழ்ச்சியா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். முன்னதாக, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை மாறாக டாலின் மதிப்புதான் உயர்ந்திருக்கிறது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.