Exclusive அம்பேத்கரின் கோஷம் ‘ஹரஹர மஹாதேவ்’.. விசிக திட்டத்தை முறியடிக்கவே காவி! அர்ஜூன் சம்பத் பரபர
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கரிஸ்ட் கிடையாது, பெரியாரிஸ்ட் என இந்து மக்கள் கட்சித் அர்ஜூன் சம்பத், ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரை பெரியாரியவாதியாக முன்னிறுத்தும் முயற்சிகளில் விசிக உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே அம்பேத்கருக்கு காவி அணிவித்து போஸ்டர் அடித்தோம் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, அம்பேத்கருக்கு காவி அணிவித்து இந்தி மக்கள் கட்சியினர் போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்பேத்கருக்கு பட்டை குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்த மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டும் என திருமாவளவன் கடுமையாக தெரிவித்திருந்தார்.
பெரியாருக்கு தலைவர் முருகன் வாழ்த்து சொல்கிறார்..பெரியாரிஸ்ட் என்கிறார் குஷ்பு! அட..அந்த பாஜகவா இது?
அம்பேத்கர் தேசியவாதி
இந்நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "அம்பேத்கர் ஒரு தேசியவாதி, பாரத நாட்டிற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். 'கலியுக மனு'வான அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். ஆனால், அம்பேத்கரை பெரியாரியவாதியாக முன்னிறுத்தும் முயற்சிகளில் விசிக உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை முறியடிக்க வேண்டும், அம்பேத்கர் தேசியத் தலைவர் என்பதை உணர்த்தத்தான் இவ்வாறு போஸ்டர் அடித்தோம்.
அம்பேத்கர் விரும்பியது காவி
அம்பேத்கர் விரும்பியது காவி, அம்பேத்கரின் கட்சி இந்திய குடியரசு கட்சி, கொடி நீலக்கொடி. அம்பேத்கரின் சின்னம் அசோக சக்கரம். அம்பேத்கர் பௌத்த மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார். பௌத்த மதத்தின் நிறம் காவி. அம்பேத்கர் காவிக்கு ஒருபோதும் எதிரி அல்ல, அம்பேத்கர், சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், தீண்டாமை இழிவுகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றுதான் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவினார். பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன், சாகும்போது இந்துவாக சாகமாட்டேன் என்ற அற்புதமான அறிவிப்பை வெளியிட்டு பௌத்த மதத்திற்கு மாறினார்.
இந்து சமயத்தை சீர்திருத்த நினைத்தார்
பௌத்த மதம் இந்து சமயத்தின் ஒரு கூறு. பௌத்தம் பாரத நாட்டில் தோன்றியது. அம்பேத்கரை அணுகி, நீங்கள் இஸ்லாமியராக மாறுங்கள், உங்களுக்கு ஆட்சி, அதிகாரம், பணம், புகழ் எல்லாம் கிடைக்கும் என்றார்கள், ஆனால், அம்பேத்கர் அதற்கு பலியாகவில்லை. அதேபோல, கிறிஸ்தவர்கள் அம்பேத்கரை அணுகினார்கள். அதிலும் அவர் இணையவில்லை. அம்பேத்கர் இந்து சமயத்தை சீர்திருத்த நினைத்தார். சாதி ஏற்றத்தாழ்வுகளை, தீண்டாமை இழிவுகளை ஒழிக்க நினைத்தார். அதனால் தான் அவர் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார்.
அம்பேத்கரை தோற்கடித்தது அவர்கள்தான்
அம்பேத்ரை ஒரு சீர்திருத்தவாதியாக, தேசியவாதியாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறோம். ஆனால், விடுதலை சிறுத்தைகள், ஈவெராவை தங்கள் மனதில் வரித்துக்கொண்டு, ஈவெரா சொன்னதை எல்லாம் அம்பேத்கர் சொன்னார் என்பது போல ஒரு திரிபுவாதத்தை திராவிட இயக்கத்தினர், கம்யூனிஸ்டுகள், அர்பன் நக்சல்கள் இங்கு தொடர்ந்து செய்து வருகிறார்கள். அம்பேத்கர் தன் வாழ்நாளில், 'கம்யூனிஸ்ட்கள் என் முதல் எதிரி' என தெளிவாக பிரகடனப் படுத்தினார். அம்பேத்கரை தோற்கடித்ததே காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் இணைந்துதான்.
அம்பேத்கருக்கு ஆதரவாக இருந்தது நாங்கள்
மும்பையில் முதல் தேர்தலில் அம்பேத்கரை வெற்றி பெறச் செய்ய உழைத்தவர்கள் ஜன சங்கம், இந்து மகாசபை ஆகிய அமைப்புகள். அம்பேத்கரின் பல கொள்கைகள் இருக்கும்போது அம்பேத்கரின் மனு தர்ம எதிர்ப்பை மட்டுமே முன்னிறுத்தி அவரை ஒரு இந்து விரோதியாக, தேசவிரோதியாக, பிரிவினைவாதியாக இங்கே சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்வவாதிகள் அத்தனை பேருமே அம்பேத்கரை ஒரு மகத்தான தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அம்பேத்கர் விரும்பி ஏற்றுக்கொண்ட காவியை நாங்கள் அணிவித்திருக்கிறோம். அதில் எந்தத் தவறும் கிடையாது.
சிலுவை போட்டால்
வள்ளுவருக்கு ருத்ராட்சம் போட்டாலும், அம்பேத்கருக்கு திருநீறு அணிவித்தாலும் விசிகவினர் எதிர்ப்பார்கள். வள்ளுவருக்கு சிலுவை அணிவித்தால் திருமாவளவன் வரவேற்பு தெரிவிப்பார். வள்ளுவர் கிறித்தவர் என்று எங்காவது கருத்தரங்கம் நடத்தினால் திருமாவளவன் அங்கு போய் அதற்கு வலு சேர்த்துப் பேசுவார். கிறிஸ்தவ மத மாற்றத்திற்கும், இஸ்லாமிய மத மாற்றத்திற்கும் ஆதரவாக அம்பேத்கரின் கொள்கைகளுக்கும் முரணாக, துரோகம் செய்யக்கூடிய வகையில் திருமாவளவன் செயல்படுவார்.
ஹரஹர மஹாதேவ்
சனாதனத்திற்கு ஜாதி மதம் கிடையாது, அம்பேத்கர் சனாதனத்தை எதிர்த்தார் என்றால், சமஸ்கிருதம் இந்த நாட்டின் இணைப்பு மொழியாக வேண்டும் என்று எப்படி சொல்லி இருப்பார்? காலாராம் ஆலய நுழைவுப் போராட்டத்தின்போது அம்பேத்கரின் கோஷம் 'ஹரஹர மகாதேவ்' என்பதுதான். 'ஜெய் பீம்' என்பதுதான் அம்பேத்கரின் முழக்கம். ஆனால், அம்பேத்கரை பெரியாரிஸ்ட்டாக மாற்ற விசிகவினர் முயற்சிக்கிறார்கள். பெரியார் வேறு, அம்பேத்கர் வேறு.
திருமா பெரியாரிஸ்ட்
அம்பேத்கரும், ஈவெராவும் 3 முறை சந்தித்திருக்கிறார்கள். பர்மா, மும்பை, சென்னை என மூன்று முறை சந்தித்தபோதும் ஈவெரா சொன்ன ஒரு விஷயத்தைக் கூட அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. திருமா அம்பேத்கரிஸ்ட் கிடையாது, திருமாவளவன் பெரியாரிஸ்ட். எங்களது கட்சிக்காரர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றால், விசிகவினர், வேறு கட்சியினர் இங்கே வரக்கூடாது என பாசிஸ்ட் போல செயல்படுகிறார்கள். நாங்கள் சட்டம் அங்கீகரித்துள்ளபடி, எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், அம்பேத்கருக்கு காவி அணிவித்து போஸ்டர் அடித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.