வகுப்பெடுக்கும் பேராசிரியர் போல் திருமாவளவன் பேச ஆரம்பித்திருக்கிறார்.. கரு.பழனியப்பன் புகழாரம்!
சென்னை: சமூக ஒடுக்குமுறைகள், சாதிய ஒடுக்குமுறைகள், மக்கள் பிரச்சினைகளை பற்றி அனைவருக்கும் புரியும் வகையில் வகுப்பெடுக்கும் பேராசிரியர் போல திருமாவளவன் பேசுவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனுக்கு சென்னையில் நடைபெற்ற மணிவிழா நிகழ்ச்சியில் பேசி கரு.பழனியப்பன், வரும் காலங்களில் திருமாவளவன் எழுத்துப் பணிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் மணிவிழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் நடைபெற்ற மணிவிழாவில் விசிக நிர்வாகிகள், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கரு.பழனியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், 30 ஆண்டுகளாக பல்வேறு படிநிலைகளில் திருமாவளவனை பார்த்து வருகிறேன். ஒருநாளின் 24 மணி நேரத்தில் 4 மணி நேர தூக்கம் போக, மீதமுள்ள நேரத்தில் மக்களுடன் மட்டுமே இருப்பது எவ்வளவு அயர்ச்சி தரும் என்பதை யோசிக்கிறேன்.

பேராசிரியர் திருமாவளவன்
தற்போது நன்றாக பேசும் தலைவர்கள் எழுதுவதில்லை. எழுதும் தலைவர்கல் பேசுவதில்லை. ஆனால் பேசுவது போலவே எழுதவும் செய்யும் தலைவர் திருமாவளவன். கடந்த சில ஆண்டுகளாக மிகச்சிறந்த வகுப்பெடுக்கிற பேராசிரியரை போல் பேச தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மேடையிலும் அனைவருக்கும் புரியும் வகையில் சமூக ஒடுக்குமுறையை பற்றி பேசும் தலைவர்களில் முதன்மையானவராக திருமாவளவன் இருக்கிறார்.

திருமாவளவன்
அதனால் வரும் காலங்களில் திருமாவளவனுக்கு என்று நாம் அதிக நேரம் கொடுக்க வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களும் திருமணம் செய்திருக்கும் போது, திருமணம் தேவையில்லை என்று முற்றாக கட்சிக்கு ஒப்படைத்து கொண்ட தலைவர் திருமாவளவன். அனைவரும் தலைவராக வேண்டும் என்று கூறும் ஒரே தலைவர் திருமாவளவன்.

அமைப்பாய் திரள்க
தலைவராக அனைவரும் வருவதற்கு அமைப்பாய் திரள வேண்டும். தலைவருக்குரிய இடத்தை கொடுக்கும் போது அனைவரும் அமைப்பாய் திரள முடியும். நாம் இங்கு யாரையும் திருப்பியடிக்க வேண்டிய தேவையில்லை. எதிர் கருத்தியலை கொண்டவர்களை உரையாட அழைத்து பேச வேண்டும். அவர்களாகவே பயந்து ஓடுவார்கள். திருமாவளவன் அழைத்தால், பலரும் பேச வராமல் இருக்க அதுதான் காரணம்.

கற்பிதங்களும் உண்மையும்
சமூகத்தின் கற்பிதங்களும், உண்மையும் வெவ்வேறாக இருக்கிறது. அந்த இரண்டுக்குமான வேலையை குறைப்பதற்கான பணியை தான் திருமாவளவன் செய்து வருகிறார். அதனால் திருமாவளவனுக்குரிய நேரத்தை தொண்டர்களும், ஆதரவாளர்களும் கொடுக்க வேண்டும். வரும் காலங்களில் திருமாவளவன் எழுத்துப் பணிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.












Click it and Unblock the Notifications