தூக்கில் தொங்கிய திருவேற்காடு நர்சிங் மாணவி.. சூடுபிடிக்கும் விசாரணை! சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் நர்சிஸ் கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அவரது விடுதி அறையிலிருந்து மாணவியின் உடல் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து இறந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. தற்போது கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இவர் அக்கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்றிரவு நீண்ட நேரம் ஆகியும் மாணவி தனது அறையை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் கதவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அம்மாணவி அறையின் உள் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்து அவர்களை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை ஏற்பாடாக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் பூந்தமல்லி தாசில்தார் சக மாணவிகள் மற்றும் பேராசிரியர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி எவ்வித தற்கொலை கடிதமும் எழுதி வைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து அதனை ஆய்வு செய்து வருகின்றனர். சமீப நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications