உட்கட்சி சதி.. கடைசி நேரத்தில் முதுகில் குத்திய பாஜக கவுன்சிலர்.. பதவி இழந்த அதிமுக சேர்மன் குமுறல்!
அதிமுக ஒன்றிய பெண் சேர்மன் தனது பதவியை இழந்துள்ளார்.
சென்னை : சொந்தக் கட்சியினரின் சதியாலும், பாஜக கவுன்சிலர் முதுகில் குத்தியதாலும், தான் பதவி இழந்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு சேர்மன் குமுறியுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிமுக உட்கட்சி பூசலால் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதல் காரணமாகவே தான் பதவி இழந்ததாக கரூர் மாவட்டம் தோகைமலை முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் லதா ரெங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக கவுன்சிலர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லதா ரெங்கசாமி பதவி இழந்துள்ளார்.

அதிமுக ஒன்றிய சேர்மன்
2019ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 10, திமுக 4, பாஜக 1 என வெற்றி பெற்றன. அதிமுகவைச் சேர்ந்த லதா ரெங்கசாமி ஒன்றியக்குழு தலைவராகவும், சி.பாப்பாத்தி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றியக்குழு தலைவர் லதாவின் கணவர் ரெங்கசாமி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், பணிகள் ஒதுக்க கமிஷன் கேட்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கட்சி தாவிய கவுன்சிலர்கள்
இதற்கிடையே ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாப்பாத்தி தலைமையில் 8 அதிமுக கவுன்சிலர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தனர். அதேசமயம் திமுக கவுன்சிலர் லதா வேலுச்சாமி திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவர் லதா ரெங்கசாமி மீது கடந்த பிப்.3ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் தோகைமலை ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக்கூட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் 8ஆம் தேதி நடைபெற்றது.

பாஜக கவுன்சிலரும்
இதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லதா ரெங்கசாமி, அதிமுக உறுப்பினர் முருகேசன், திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த லதா வேலுச்சாமி ஆகிய 3 பேர் தவிர 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பாஜக ஒன்றியக்குழு உறுப்பினர் சரண்யா ஆகிய 12 பேர் பங்கேற்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த கவுன்சிலர்கள், பாஜக கவுன்சிலர் என 12 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஒன்றியக்குழு தலைவர் லதா ரெங்கசாமி பதவியிழப்பது உறுதியானது.

கட்சியினரே காரணம்
இது குறித்து லதா ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவிலிருந்து 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு மாறினர். இதற்கு தோகைமலை ஒன்றிய பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தான் காரணம். நான் ஒன்றிய குழு தலைவர் பதவியை இழந்தது கூட அதனால் தான். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் உட்கட்சி பூசலால் எனது பதவியை இழந்துள்ளேன். கடந்த காலங்களில் குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்தது.

பாஜக கவுன்சிலர்
தோகைமலை ஒன்றியத்தில் அதிமுக பலமான கட்சியாக இருந்த போதிலும் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசலால் அதிமுக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. எனவே கட்சி தலைமை மற்றும் மாவட்டச் செயலாளர் இதில் கவனம் கொண்டு கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவில் இருந்த 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு அணி மாறிய போதிலும், கூட்டணி கட்சியாக இருந்த பாஜக கவுன்சிலர் ஆதரவு அளித்ததால் தான் தைரியமாக இருந்தேன்.

பணத்திற்காக விலைபோனார்
மார்ச் எட்டாம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போதும் பாஜக கவுன்சிலர் எனக்கு ஆதரவு அளிப்பார் என்று பாஜக மாவட்ட தலைவர் மற்றும் மாநிலத் தலைவர் கூறி இருந்த நிலையில் தற்போது அவரும் பணத்திற்காக விலை போய் எனக்கு எதிராக வாக்களித்துள்ளார். என்னை திமுகவிற்கு கட்சி மாற அழைத்த போதிலும் நான் வர முடியாது என மறுத்ததால் எனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications