இடி, மின்னலுடன் வெளுத்துக் கட்டிய கனமழை... தலைநகர் மக்கள் மகிழ்ச்சி
Recommended Video
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்று சென்னை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் சுழற்சி நிலவுவதால், அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவில் சென்னை மற்றும் புறநகரில் கனமழை பெய்தது. குறிப்பாக, கோடம்பாக்கம், அசோக்நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, திருவான்மியூர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி போன்ற புறநகர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
அதே போன்று காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை வெளுத்து வாங்குவதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் இருந்து திறந்து விடப்பபடும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.