Exclusive:கொரோனா பரிசோதனையில் தவறான வழிகாட்டுதல்... தைரோகேர் நிர்வாக இயக்குநர் வேலுமணி வேதனை
சென்னை: ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவது சரியான வழிமுறையல்ல என்றும், இது தவறான வழிகாட்டுதல் எனவும் வேதனை தெரிவிக்கிறார் தைரோகேர் ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் வேலுமணி.
ரேபிட் டெஸ்ட் கிட் தவறான முடிவை காட்டுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதிலுள்ள குளறுபடிகள் குறித்து பேசுவதற்காக தைரோ கேர் ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் வேலுமணியை தொடர்பு கொண்டோம்.
அப்போது அவர் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;
வேலுமணி வேதனை
''ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை என்பது ஒரு Diagnostic டெஸ்டே கிடையாது. அரசியல்வாதிகளுக்கும், சில ஊடகவியலாளர்களுக்கும் விஞ்ஞானம் தெரியவில்லை. இதனால் தான் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நடத்தப்படும் சோதனைக்கும், பிசிஆர் சோதனைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகின்றனர். உதாரணத்துக்கு உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன் மனைவி மனைவிதான், நண்பன் நண்பன் தான். இப்படித்தான் சோதனை விவகாரத்திலும் பிசிஆர் சோதனைக்கு எந்த வகையிலும் ரேபிட் டெஸ்ட் மாற்றாக இருக்க முடியாது.
ரேபிட் டெஸ்ட் பயனற்றது
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்கள் கொள்முதல் குழுவில் ஆராய்ச்சியாளர்களை சேர்ப்பதில்லை. அதிகாரிகள் தாங்களாக முடிவெடுத்து உபகரணங்களை கொள்முதல் செய்கின்றனர். ரேபிட் டெஸ் கிட் விவகாரத்தில் இந்தியா மட்டும் ஏமாறவில்லை. உலகின் பல நாடுகளிலும் நம்மை போலவே ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கி பரிசோதனையை தொடங்கி 3 நாட்களில் அது நிறுத்தப்பட்டுள்ளன. ஸ்பெயினில் இதேபோன்று தான் ரேபிட் டெஸ்ட் கிட் தவறான முடிவை காட்டியது, உடனடியாக அது திருப்பிக் கொடுக்கப்பட்டது. ரேபிட் டெஸ்ட் கிட்களால் எந்த பயனும் இல்லை என்று, ஒரு வாரத்திற்கு முன்னர் டிரம்ப் கூறிவிட்டார்.
குழப்பாதீர்கள்
பிசிஆர் சோதனை நடத்த முடிந்தால் அரசு நடத்த வேண்டும் இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து ரேபிட் டெஸ்ட் அது இது என தவறான அணுகுமுறைகளை முன்னெடுத்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. விரைவில் எலைஸா டெஸ்ட் நடைமுறைக்கு வரும். அந்த சோதனை ஓரளவு நல்ல பலன் தரும். எலைஸா டெஸ்ட் மூலம் மிகவும் துல்லியமாக முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
உயிரிழப்புக்கு காரணம்
வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க கொரோனா பரிசோதனை மட்டுமே தீர்வல்ல. சோதனை நடத்தினால் இன்னாருக்கு பாசிட்டிவ், இன்னாருக்கு நெகட்டிவ் என்பதை அறிந்துகொள்ளலாமே தவிர வேறு எந்த பயனும் ஏற்படாது. சோதனை தான் மருந்து என்ற கண்ணோட்டம் நிலவுகிறது, அது தவறு. பணக்காரர்கள் மிகவும் ஹைஜீனிக்காக வாழ்ந்தே பழக்கப்பட்டதால் அவர்களின் உடல் (pathogenic) நோய்கிருமியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. அமெரிக்காவில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட காரணமே இதுதான்.
கை கழுவமாட்டார்கள்
ஆனால் நமது ஊரில் அப்படியில்லை சாப்பிடும் போது கை கூட கழுவமாட்டார்கள், ஆனால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. காரணம் இயல்பாகவே இந்தியர்களின் உடலில் (pathogenic) நோய்கிருமியை எதிர்த்து போராடக் கூடிய ஆற்றல் உள்ளது. பொத்தி பொத்தி உடலை பாதுகாத்து வைத்திருந்தவர்களுக்கு நோய்கிருமியை எதிர்த்து போராடும் சக்தி இல்லை.''
இதன் தொடர்ச்சி அடுத்த செய்தியாக...