இரண்டு சாலை விபத்து, இரண்டு பேர் மரணம்.. பதைபதைக்க வைக்கும் இரண்டு சிசிடிவி காட்சிகள்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு சாலை விபத்துகள் நடந்தன. இதில் இரண்டு பேர் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இரண்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து நேற்று மாலை நடைபெற்றது. அரூர் சந்திராபுரத்தை சேர்ந்த சங்கர் (41) என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியை அதே ஊரைச்சேர்ந்த அன்பு (39) என்பவர் ஓட்டி வந்தார்.
ஓசூரில் எம்.சேன்ட் ஏற்றுவதற்காக போச்சம்பள்ளி 4 வழிச்சாலை வந்தபோது எதிரே டிவிஎஸ் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த பூதனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் (60), அவரது மனைவி நல்லமாள் (50) பேரன் இன்பரசன் (7) ஆகியோர் மீது மோதியதில் முன் சக்கரத்தில் சிக்கி சற்று தூரம் இழுத்து சென்றது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டு சப்தம்போடவே ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினார்.

குழந்தை தப்பியது
பின்னர் மூவரையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். அவரது மனைவி நல்லம்மாள் மற்றும் பேரன் இன்பரசன் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். முருகன் தனது மனைவி நல்லம்மாள் மற்றும் பேரன் இன்பரசன் ஆகியோருடன் அருகே மங்கலப்பட்டி கிராமத்தில் உள்ள தனது மகள் மல்லிகாவை பார்பதற்காக சென்றபோது இவ்விபத்து நடந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

முதியவர் பலி
புதுச்சேரி வில்லியனூர் மேம்பாலம் அருகே பேருந்து மோதி முதியவர் பலியானார். பேருந்து விபத்து குறித்தான பதைபதைக்கும் சிசிடிவி வெளியாகியுள்ளது. புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சார்ந்தவர் ராஜு. வயது 65. இவர் இன்று காலை 11 மணியளவில் மனவெளியில் இருந்து கொம்பாக்கம் பகுதிக்கு செல்வதற்காக வில்லியனூர் அருகே உள்ள மேம்பாலம் அருகே திரும்பி உள்ளார்.

உயிரிழப்பு
அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று வேகமாக மேம்பாலத்தில் இருந்து இறங்கி உள்ளது. பேருந்தை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பேருந்து பலமாக மோதியதில் அவர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். அவர் தலை கவசம் அணியாததால் அவர் தலையில் பலத்த அடி பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சி
விபத்து குறித்தான சிசிடிவி தற்போது வெளியாகி உள்ளது. இதில் அவர் மீது பேருந்து விபத்தை ஏற்படுத்தும் பதைபதைக்கும் காட்சி பதிவாகி உள்ளது . சிசிடிவி காட்சிகளை கொண்டு வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications