மதுரையில் ஆவேசம்... அழகிரியை மீண்டும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கருணாநிதி குடும்பம்
சென்னை: மதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து மு.க. அழகிரி பேசியதை தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் எனது பங்கும் இருக்கும் என அறிவித்த கையோடு மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் ஜனவரி 3-ல் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாம் எடுக்கப் போகும் முடிவுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார் அழகிரி.

ஸ்டாலின் மீது தாக்கு
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது; அவரை முதல்வராக்க எமது ஆதரவாளர்கள் விடவும் மாட்டார்கள் என்றார். அத்துடன் மு.க. ஸ்டாலினுடனான தனிப்பட விவகாரங்களையும் பகிரங்கமாக பேசினார் அழகிரி.

அதிர்ச்சியில் திமுக
இது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நேரத்தில் அழகிரி, திமுகவுக்கு எதிரான எந்த ஒருமுடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

அழகிரி தரப்பு நிபந்தனை
இருந்தபோதும் அழகிரி தரப்பு இதனை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. திமுகவுக்கு சொந்தமான அறக்கட்டளைகள் ஒன்றில் மகனுக்கு பொறுப்பு கொடுத்தால் மட்டுமே சமாதானமாக முடியும் என்பதில் அழகிரி தரப்பு உறுதியாக உள்ளதாம்.

தீவிரமாகும் சமாதான முயற்சிகள்
இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை பேசிவிட்ட போதும் தமக்கு சாதகமான முடிவு எதனையும் தெரிவிக்காமல் தேர்தல் நேரத்தில் சமாதனப்படுத்துகிறீர்களா? என அழகிரி தரப்பு ஆவேசம் காட்டியதாம். இப்போதைக்கு அழகிரி தரப்பை எப்படியாவது சமாதானப்படுத்தியாக வேண்டும் என்பதில் கருணாநிதி குடும்பத்தினர் மும்முரமாக உள்ளனராம்.












Click it and Unblock the Notifications