சுழற்சி முறையில் துணை முதல்வர் பதவி... எம்.எல்.ஏக்களை தக்க வைக்க எடப்பாடியாரின் தடாலடி வியூகம்
சென்னை: சட்டசபை தேர்தலில் எப்படியும் வென்றுவிடுவோம் என கணக்குப் போட்டு அமைச்சரவையை தயார் செய்து கொண்டிருக்கிறது திமுக தலைமை. அதேநேரத்தில் அதிமுகவில் ஆட்சியை தக்க வைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கையுடன் தடாலடியாக வியூகங்களை வகுத்து வருகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சுப்புலட்சுமி அக்காவுக்கு சபாநாயகர் பதவி கொடுத்தால் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி?
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பில் இருந்தே முதல்வர் எடப்பாடியார் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு காய்நகர்த்தலை தொடங்கிவிட்டார். அதிமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்ததன் பின்னணியே அவர்கள் எப்படியும் தமக்கான ஆதரவாளராக மட்டுமே இருப்பார்கள். பாஜக பக்கமோ, சசிகலா அல்லது ஓபிஎஸ் பக்கமோ தாவ மாட்டார்கள் என்ற நம்பிக்கை லிஸ்ட்டில் இடம்பிடித்தவர்கள் சீட் வாங்கிய சிட்டிங் எம்.எல்.ஏக்களாம்.
எடப்பாடியார் வியூகம்
அத்துடன் தம்மை விட்டு எந்த சூழலிலும் விலக மாட்டார்கள் என்கிற நம்பிக்கையான அமைச்சர் ஒருவர் பரிந்துரைத்த அத்தனை பேரையும் வேட்பாளர் என முடிவு செய்தாராம் எடப்பாடியார். ஏனெனில் அந்த அமைச்சர் பரிந்துரைத்த கணிசமானவர்கள் வெற்றி பெறுவார்கள்; அத்துடன் கட்சியில் பிரச்சனை வந்தால் தமது அணியைவிட்டு இம்மியளவும் நகரமாட்டார்கள் என்பதுதான். ஏனெனில் அவர்களின் தேர்தல் செலவுகளையும் அந்த அமைச்சர் பார்த்து கொண்டதும் ஒரு காரணம்.
ஆட்சி பிளஸ் கட்சி
இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைத்துவிடும் என்பது எடப்பாடியார் தரப்பு நம்பிக்கை. ஆட்சியை தக்க வைத்துவிட்டால் மட்டும் போதாது கட்சியையும் முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதிலும் கவனமாக செயல்பட்டு வருகிறதாம் எடப்பாடி தரப்பு.
துணை முதல்வர், துணை பொதுச் செயலாளர்
இதற்காக எடப்பாடியார் தரப்பு கையில் எடுத்திருக்கும் முதல் ஆயுதம் துணை முதல்வர் பதவி. அதுவும் துணை முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஜாதிய பிரதிநிதித்துவம் அடிப்படையில் கொடுப்பது என முடிவு செய்திருக்கிறாராம். அடுத்த ஆயுதம் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி. இந்த இரு பதவிகளை வைத்துதான் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறாராம் எடப்பாடியார் தரப்பு.
பேசி முடிவு சொல்லுங்க
ஒரே பகுதியில் எடப்பாடியாரின் 2 விசுவாசிகள் இருந்தால் யாருக்கு துணை முதல்வர் பதவி? யாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி என்பதில் சிக்கல் வரும். அதனால் அப்படியான நபர்களை அழைத்து எந்த பதவி யாருக்கு என்பதை நீங்களே பேசி முடிவு எடுத்து கொண்டு சொல்லுங்க எனவும் அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டாதாம் எடப்பாடியார் தரப்பு. அதிமுக தலைவர்கள் இப்போது துணை முதல்வரா? துணைப் பொதுச்செயலாளரா? என்கிற முடிவுக்காக தங்களுக்குள் மல்லுக்கட்டுகிறார்களாம்.
இப்போதே குழிபறிப்பு
முதல்வர் எடப்பாடியாரின் இந்த வியூகங்களை கேள்விபட்ட அதிருப்தி தரப்போ, இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை எப்படி எல்லாம் போடலாம்? என தீவிரமான யோசனையில் இருக்கிறதாம். அதனால் யார் யாரெல்லாம் தங்கள் பக்கம் வருவார்கள் என்கிற லிஸ்ட்டுடன் அந்த தரப்பும் அடுத்த கட்ட ஆலோசனைகளை நடத்திக் கொண்டு இருக்கிறதாம்.