"குறி" வெச்சாச்சு.. கமல், சீமான், தினகரன்.. டெல்லிக்கு பறந்த ஃபைல்.. "அவர்" கண்காணிக்க சொன்னாராமே?
பாஜக மேலிடம், அமமுக, கமல், சீமானின் செயல்பாடுகளை கவனித்து வருகிறதாம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது டெல்லியின் பார்வை விழுந்துள்ளதாம்.. என்னவா இருக்கும்?
தேர்தல் முடிந்துவிட்டது.. நடந்து முடிந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டது.. இந்த முறை 3வது அணி அமைக்கப்படுமா என்ற டவுட் இருந்துகொண்டே இருந்த நிலையில், 5 கட்சிகள் களம் கண்டன.
திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில்தான் போட்டி என்றாலும், சீமான், தினகரன், கமல் 3 பேருமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்களாம்.. தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் இவ்வாறு சொல்கிறது.
ஸ்டாலினுக்கு சமூக நலனுக்கான Champions of Change Award 2020- கோவா விழாவில் மகா. ஆளுநர் வழங்கினார்
டிடிவி தினகரன்
இந்த 3 பேரில் சீமான் அரசியலில் சீனியர்.. 10 வருடமாகவே களம் கண்டு வருகிறார்.. அதுவும் தனியாகவே தேர்தலை சந்தித்து வருகிறார்.. இதற்கு பிறகு டிடிவி தினகரன் ஆரம்பத்தில் மிகுந்த எழுச்சியுடனும், அதற்கு பிறகு சற்று பலம் குறைந்த நிலையில் இருந்தாலும், மீண்டும் அசுர பலத்துடன் எழுந்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியப்படுத்துபவர் கமல் மட்டுமே. அரசியலில் ஜூனியர் என்றாலும், அதிமுக, திமுகவையே அண்ணாந்து பார்க்க வைத்தவர்.. கூட்டணி வைக்கலாமா என்று திமுகவே யோசிக்கும் அளவுக்கு உயர்ந்தவர்.
கமல்
இப்போது விஷயம் என்னவென்றால், 3 பேருமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்களாம்.. அதனால்தான் டெல்லியை இவர்கள் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.. இதற்கு காரணம், தமிழகம் முழுக்க இளம் வாக்காளர்கள் கணிசமாக சீமான் பக்கமும் கமல் பக்கமும் சாய்ந்துள்ளதாக தெரிகிறது.
சீமான்
கிராமப்புறங்களில் சீமானுக்கும், கமலுக்கு நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளை பெறுவார் என்று கூடுதல் விவரங்களும் கிடைத்து வருகிறது. அதேபோல, அதிமுகவின் வாக்குகளை, இந்த முறை திமுகவைவிட அமமுகவே அதிகம் பிரிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள். இதுபோன்ற கள ரிப்போர்ட்களை எல்லாம் டெல்லியும் கவனித்து வருகிறது.
5 முனை
நடந்த முடிந்த இந்த 5 முனை போட்டியால், எப்படியும் வாக்குகள் பிரியும், அது அதிமுக கூட்டணிக்கும் அதில் உள்ள பாஜகவுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று டெல்லி நினைத்தது... எனவேதான், தற்போதும், பிறகும் டெல்லியின் கவனம், கமல், சீமான், தினகரன் மீது தொடர்கிறது. அதனாலேயே, இவர்கள் 3 பேரும் தேர்தலில் பிரித்த வாக்குகள் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? என்று சர்வே ஒன்றை எடுத்துத் தருமாறு மத்திய உளவுத்துறையிடம் கேட்டிருக்கிறாராம் அமித்ஷா.
ரிப்போர்ட்
அமித்ஷா கேட்டபடியே, 2 நாளைக்கு முன்பு, அந்த ரிப்போர்ட்டை டெல்லிக்கும் அனுப்பி வைத்திருக்கிறது புலனாய்வு அமைப்பு... அதன்படி, கமலும், சீமானும் பிரித்ததில் பெருமளவு வாக்குகள் திமுகவின் வாக்குகளே என்றும், அதனால் திமுகவுக்குதான் பாதகம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, தினகரனின் அமமுக பிரிக்கும் வாக்குகளால் முழுமையாக அதிமுகவுக்குப் பாதிப்பு என்றும் ரிப்போர்ட் போயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பாஜக
ஏற்கனவே கமலுக்கும், சீமானுக்கும் பாஜகவின் பி-டீம் என்று ஒரு பெயர் இருக்கிறது.. தினகரன் தேர்தலுக்கு முன்புவரை பாஜகவை விமர்சித்து கொண்டிருந்தவர், சசிகலா ரீலீசுக்கு பிறகு பாஜக குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார்.. அந்தவகையில் 3 பேருமே பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருபவர்கள்தான்.. இப்போது ரிப்போர்ட் வேறு சென்றுள்ளதால், அந்த ரிப்போர்ட் எதற்கு? அதை வைத்து கொண்டு டெல்லி என்ன செய்ய போகிறது என்பது பெரிய சஸ்பென்ஸ்தான் போலும்..!