குட் நியூஸ்.. மெட்ரோ ரயில் வண்டலூர் வரை நீட்டிப்பு.. கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு ஸ்டாலின் பதில்!
தமிழ்நாடு குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல் கேள்வியை கருணாநிதி எம்எல்ஏ கேட்க அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
சென்னை: சட்டசபையில் முதல் கேள்வியை முன்வைத்த கருணாநிதி எம்எல்ஏவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கேள்வி நேரம் இன்று நேரலையில் ஒளிபரப்பானது. எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
Recommended Video

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் இன்றும் நாளையும் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சட்டசபைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, அவை கூடிய உடன் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படைத்தளபதி பிபின் ராவத், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து கேள்வி நேரம் இன்று நேரலையாக ஒளிபரப்பானது. வழக்கமாக சட்டசபை நடைபெறும் போது எடிட் செய்யப்பட்ட காட்சிகள் மட்டுமே ஊடகங்களுக்குக் கொடுக்கப்படும். தமிழக சட்டசபை வரலாற்றில் முதன் முறையாக கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை
முதல் கேள்வியாக பல்லாவரம் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி முதல் கேள்வியை முன் வைத்தார். மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். எம்எல்ஏவின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வில் உள்ளது என அவர் பதில் அளித்தார்.

பொன்முடி பதில்
அதனை தொடர்ந்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஒட்டப்பிடாரத்தில் அரசு கல்லூரி அமைக்க உறுப்பினர் சண்முகையா கோரிக்கை வைத்தார் அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ஒட்டப்பிடாரத்தில் அரசு உதவி பெரும் கல்லூரி, தனியார் கல்லூரிகள் உள்ளன என தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள்
அதிராம்பட்டினம் நகராட்சியில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா என உறுப்பினர் அண்ணாதுரை கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, புதிதாக உருவாக்கப்பட்ட 25 நகராட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள் சட்டசபை
நாளைய தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேச உள்ளார். கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே சட்டசபை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் 2022 - 23 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட், பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார். இதனையடுத்து மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications