100-க்கு 100 மதிப்பெண் வழங்குவேன்.. திடீரென தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டிய அண்ணாமலை
சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக உள்ளது. பல்வேறு விவகாரங்களில் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!
அதுவும் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு, போலீசார் மீது பொங்கியெழுந்தார் அண்ணாமலை. பா.ஜ.க. ஆதரவாளரும், பிரபல யூடியூபருமான மாரிதாஸ் என்பவர் வெலிங்டன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தை வைத்து காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி இருந்ததால் கைது செய்யப்பட்டார்.
ஏழாம் பொருத்தம்
மாரிதாஸ் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அண்ணாமலை தமிழக போலீசார் டி.ஜி.பி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்படுகிறார்கள்.எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் மிக கடுமையாக பேசி இருந்தார் அண்ணாமலை. இத்தோடு விட்டு விடாமல் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக அரசுக்கு எதிராக பரபரப்பு புகார் கூறியதாகவும் கூறப்பட்டது.
திடீர் பாராட்டு
தமிழக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு..க.வினர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இப்படி அண்ணாமலை-திமுக இடையே மோதல் பெரிதாக சென்று கொண்டிருக்க திடீரென திமுக.வை புகழ்ந்து பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக திருவண்ணாமலையில் நிருபர்களிடம் பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது:-முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைந்த சம்பவத்தின் போது, மீட்புப் பணியில் தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். துரிதமாகப் பணியைச் செய்துள்ளனர்.
100-க்கு 100 மதிப்பெண்
உயிரைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் எரியும்போது தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். இதற்காக 100-க்கு 100 மதிப்பெண் வழங்க வேண்டும். முதல்வரில் தொடங்கி கடைசி மனிதன் வரை, 3 நாட்களுக்குச் செய்த மீட்புப் பணியின் மூலம், இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அரசியலுக்காக பாஜக குற்றம் சுமத்தாது. இந்தச் சம்பவத்தில் தமிழக அரசுடன் நாங்கள் இருப்போம்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ' உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. பாஜக அரசின் சாதனைகள், திமுக ஆட்சி செய்யும் தவறுகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்வோம். சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிடுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க, இதுபோல் செய்கின்றனர். அதே வேளையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது. இனிமையான பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் கொண்டாடப் பரிசுத் தொகையைத் தமிழக அரசு கொடுக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.