மூர்க்கத்தனமான செயல் “அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியா சந்திங்க”- ராகுலுக்காக வெகுண்டெழுந்த ஸ்டாலின்!
சென்னை : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அமலாக்க இயக்குனரகத்தைப் பயன்படுத்தி ஆளும் பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் மூர்க்கத்தனமான செயலில் ஈடுபடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
முப்படைகளில் 4 ஆண்டுகள் பணி.. அக்னிபாத் திட்டத்தின் சிறப்பசங்கள் தெரியுமா?
மேலும், "அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், அமலாக்க இயக்குனரகத்தைப் பயன்படுத்தி அல்ல" என முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியது. இதில் முறைகேடு நடந்ததாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது சு.சுவாமி குற்றம்சாட்டினார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம்
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தவைர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. சோனியா காந்தி கடந்த 8-ஆம் தேதியும், ராகுல்காந்தி கடந்த 2-ஆம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், வெளிநாட்டில் இருந்ததால் ராகுல் காந்தி வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி 13-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
ராகுல் காந்தியிடம் விசாரணை
அதன்படி ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் 13ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகினார். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது. ஜூன் 13ஆம் தேதி 9 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், 14ஆம் தேதி 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. இரண்டு நாட்களில் சுமார் 19 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், ஜூன் 15ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அரசியல் பழிவாங்கல்
ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது அரசியல் பழிவாங்கும் முயற்சியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபடுகிறது. ராகுல் காந்தியின் அரசியலை பார்த்து மோடி அரசு பயப்படுகிறது. அவர் பொதுமக்களின் பிரச்சினையை எழுப்புவதால் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகங்களின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பழிவாங்கும் செயல்
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக அரசு மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கும் மூர்க்கத்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக எதிர்க்கலாம்
மேலும், "சாமானியர்கள் சந்திக்கும் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு பதில் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக இதுபோன்ற திசை திருப்பும் யுக்திகளைப் பயன்படுத்துகிறது. அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், அமலாக்க இயக்குனரகத்தை வைத்து அல்ல." என மத்திய பாஜக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.