5 நாளாகியும் பதில் சொல்லாத மத்திய அரசு.. உடனே டெல்லிக்கு பறக்கும் முதல்வர்.. 2 முக்கியமான டாஸ்க்!
சென்னை: தமிழகத்திலேயே செங்கல்பட்டில் வேக்சின் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டும் மத்திய அரசு இன்னும் பதில் சொல்லவில்லை, அதேபோல் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் வேக்சின் அளவும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வேக்சின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது பாரத் பயோடெக், சீரம் ஆகிய நிறுவனங்களில் மட்டுமே வேக்சின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் போதிய வேக்சின் இல்லை.
முக்கியமாக தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களுக்கு கொடுக்க போதிய வேக்சின் இல்லை. இதனால் தமிழகத்தில் 3ம் தேதி வேக்சின் போடுவது நிறுத்தப்பட உள்ளது.
எப்படி
இந்த வேக்சின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக தான் தமிழக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு முயன்று வருகிறது. மத்திய அரசின் இந்த நிறுவனத்தை தமிழக அரசு குத்தகைக்கு கேட்டுள்ளது.
குத்தகை
நாங்களே இந்த நிறுவனத்தை ஏற்று, தனியார் உதவியுடன் உற்பத்தி செய்கிறோம். சும்மா இருக்கும் நிறுவனத்தை எங்களிடம் கொடுங்கள் என்று தமிழக அரசு கேட்டுள்ளது. இதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வாரம் டெல்லி சென்று இருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஒரு வாரத்தில் இதில் பதில் சொல்வதாக மத்திய அரசு கூறி இருந்தது.
மத்திய அரசு
ஆனால் தமிழக அரசு இந்த முயற்சிகளை செய்தும் கூட மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை. 5 நாட்கள் ஆகியும் தமிழக அரசுக்கு டெல்லியில் இருந்து இன்னும் பதில் வரவில்லை. டெல்லியில் இதுபோன்ற பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்பதால்தான் திமுக மூத்த எம்பி டிஆர் பாலு இருக்கிறார். அவர் அங்கேயே கடந்த வாரம் தங்கி இருந்தார். அவர் அங்கேயே இருந்து அழுத்தம் கொடுத்தும் கூட மத்திய அரசு இன்னும் பதில் சொல்லவில்லை.
வேக்சின்
அதேபோல் தமிழகத்திற்கு வர வேண்டிய வேக்சின், ஜிஎஸ்டி நிலுவை தொகை என்று எதுவும் இன்னும் வரவில்லை. இப்படி தமிழக உரிமைகள் பல கிடைக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் விரைவில் நேரடியாக டெல்லி சென்று பேச உள்ளார் என்கிறார்கள். முதல்வராக பதவி ஏற்றபின் ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடியை ஸ்டாலின் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் உரிமைகள் குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
டெல்லி
ஒன்றிய அரசு தமிழக கோரிக்கைகளுக்கு சரியாக செவி மடுக்காத நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேராக சென்று உரிமைகளை பெற்றுத்தருவார் என்று கூறப்படுகிறது. ஒருநாள் பயணம் அல்லது 2 நாள் பயணமாக முதல்வர் டெல்லி செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஜிஎஸ்டி நிலுவை, வேக்சின் இரண்டையும் குறிக்கோளாக கொண்டு முதல்வர் டெல்லி செல்வார் என்கிறார்கள்.