சட்டசபை தேர்தல் வெற்றி... திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றிய முதல்வர் மனைவி துர்கா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா, திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் இன்று சாமி தரிசனம் செய்தார். வியாழக்கிழமையன்று சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினால் வெற்றிகள் மேலும் தேடி வரும் என்பது நம்பிக்கையாகும்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது கணவர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சென்று வேண்டுதல் வைத்தார். திருச்செந்தூர் முதல் திருப்பதி வரை சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஆண்டு தோறும் தை அமாவாசையில் நடைபெறும் திருநாங்கூர் ஆலயங்களில் நடைபெறும் 11 கருடசேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார் துர்கா ஸ்டாலின். அதே போல 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதுமாகும். நெல்லை மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு வேண்டுதல் வைத்தார் துர்கா ஸ்டாலின். கடந்த பிப்ரவரி மாதம் திருச்செந்தூர் வந்த துர்கா ஸ்டாலின் கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கோவில்கள் மூடப்பட்டதால் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை.
படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆடி அமாவாசை நாளில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின். ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாலை அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்.
கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற தனது வேண்டுதல் நிறைவேறி விட்டதால் அனைத்து கோவில்களுக்கும் சென்று வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் துர்கா ஸ்டாலின். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக முதல்வர் மனைவி துர்காஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர்அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்தார்.
பேட்டரி கார் மூலம் கோவில் முகப்புக்கு சென்றார். பின்னர் கடலில் கால் நனைத்து விட்டு தரிசனத்திற்கு சென்றார். அங்கு சண்முகவிலாஸ் மண்டபத்தில் வைத்து அவருக்கு திரிசுதந்திரர்கள் பிரசாத தட்டு வழங்கி வரவேற்பளித்தனர். இதனையடுத்து மூலவர், சண்முகர்,வள்ளி தெய்வானை உள்ளிட்ட சன்னதிகளில் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவில் குரு ஸ்தலமாக போற்றப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் ஆலயம் திருச்செந்தூர். சூரபத்மனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் ஜெயந்திநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஊரும் திருசெயந்திபுரம் என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாகச் சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் எதிரிகளை வெற்றி கொண்டு முதல்வராக பதவியேற்றதை அடுத்து மீண்டும் அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல் வெற்றிக்காகவும் கிரகப்பெயர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேண்டும் என்றும் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியை தரிசனம் செய்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமியையும், சண்முகர், வள்ளி, தெய்வானையை வணங்கி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications