3 வாரம் கழித்து தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒருவர் பலி.. சென்னை பெண்ணுக்கு என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் 3 வாரங்கள் கழித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உயரும் பாதிப்பு
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஜூன் மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியது. தமிழ்நாட்டில் 200-க்கும் குறைவாக இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 23 ஆம் தேதி 1,000 ஐ தண்டியது. இப்படி படிப்படியாக அதிகரித்து நேற்று ஒரேநாளில் 2,654 பேர் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு கொரோனா நிலவரம்
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,662 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,88,091 ஆக அதிகரித்து இருக்கிறது.

சென்னை பாதிப்பு
சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,060 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3 வாரங்களில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் உயிரிழந்து இருக்கிறார். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,027 ஆகவே அதிகரித்து உள்ளது.

உயிரிழிந்தவர் யார்?
சென்னையை சேர்ந்த 77 வயது மூதாட்டி கடந்த 28 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 29 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சனைகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்தன. இந்த நிலையில் அவர் கடந்த 3 ஆம் தேதி அவர், கொரோனாவால் ஏற்பட்ட சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழந்து இருக்கிறார்.

குணமடைந்தவர்கள்
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,765 ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1,512 பேர் இன்று குணமடைந்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,33,299 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications