கோவையில் ரயில் மோதி.. 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
சென்னை: கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ரயில் ஓட்டுநர் மீது தமிழக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் ஓட்டுநர் சுபயர், துணை ஓட்டுநர் அகில் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை வனச்சரகம் அருகே தமிழகம் - கேரளாவை இணைக்கும் வகையில் இரண்டு இரயில் பாதைகள் உள்ளன. இதில் நேற்றிரவு முதலாம் பாதையில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை உட்பட 3 யாநைகள பரிதாபமாக உயிரிழந்தன.
ரயில் மோதி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் ஒரே சம்பவத்தில் உயிரிழந்தது சமூக ஆர்வகள்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 யானைகள்
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் அருகே க.க.சாவடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நவக்கரை பகுதியில் ரயில் பாதை செல்கிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ரயில் பாதையைக் கடக்க முயன்ற 3 யானைகள் மீது மங்களூர் -- சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 12602) மோதியது. ரயில் இன்ஜினில் சிக்கிப் படுகாயமடைந்து இந்த 3 யானைகள் அடுத்தடுத்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தன.

கருவுற்ற பெண் யானை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ரயில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும், யானைகளின் உடல்களைக் காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று உடற்கூராய்வு நடத்தினர். , 25 வயதான பெண் யானை, 6 வயதான குட்டியானை மற்றும் 18 வயதுடைய மக்னா யானை இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த பெண் யானை கருவுற்று இருந்ததும் உடற்கூராய்வில் தெரிய வந்தது.

சமூக ஆர்வலர்கள்
ஒரே நேரத்தில் கருவுற்று இருந்த யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அது வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் இடம் எனத் தெரிந்தும் அலட்சியமாக ரயிலை வேகமாக இயக்கியதாலேயே இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் இதே தவறு மீண்டும் நடைபெறாது என வலியுறுத்தினர்.

தமிழக அதிகாரிகள் சிறைபிடிப்பு
மேலும் இது குறித்து விசாரணை செய்யத் தமிழக வனத்துறையைச் சேர்ந்த இரண்டு வனவர்கள் உட்பட 6 பேர் கேரளா சென்ற நிலையில், அவர்களைக் கேரள ரயில்வே அதிகாரிகள் பாலக்காட்டில் சிறைபிடித்ததாகவும் தகவல் வெளியானது. ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றும் ரயில் எஞ்சினில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பீடோ மீட்டரை தரும்படியும் தமிழக வனத்துறை அதிகாரிகளைக் கேரள ரயில்வே அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது

வழக்குப்பதிவு
இந்தச் சூழலில் யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ரயில் ஓட்டுநர் மீது தமிழக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் ஓட்டுநர் சுபயர், துணை ஓட்டுநர் அகில் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications