சென்னை மெரினா பீச்சே மாறப்போகுது.. கருணாநிதி பெயரில் பாய்மர படகு அகாடமி.. அனுமதி கோரியது தமிழக அரசு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக அரசு வேலைகளைத் தொடங்கியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி ஒன்றை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ரூ.7 கோடி செலவில், கூவம் முகத்துவார பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளித்து வருகிறது தமிழக அரசு. சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில், பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்தல், பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தலில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் பாய்மர படகு அகாடமி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரையில் படகு இல்லம் இருந்த இடத்தில் பாய்மரப் படகு அகாடமி அமைய உள்ளது.
2 தளங்கள் கொண்ட கட்டிடமாக பாய்மர படகு அகாடமி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.












Click it and Unblock the Notifications