தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம்.. மீண்டும் அமல்படுத்தியது அரசு! “ஆனால் சில கண்டிஷன்!”
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளையும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டம் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கடைகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற உத்தரவை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

24 மணி நேரமும்
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் என கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து ஆறு மாதம் மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு
இந்நிலையில், மீண்டும் கடைகளை 24 மணி நேரம் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 3 ஆண்டுகளுக்கு கடைகள் 24 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைந்துள்ளதால், மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமலுக்கு வந்தது
அதன்படி கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 24 மணி நேரம் கடைகளை திறக்க சில நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது. அந்த விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய நிபந்தனைகள்
24 மணி நேரமும் செயல்படும் கடைகள் ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும். ஊழியர்கள் குறித்த தகவல்கள், அனைவரின் பார்வையிலும் படும் இடத்தில் வைக்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் யாரையும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. கூடுதல் நேரம் வேலை பார்த்தால், கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும்.

பெண்கள் பணியாற்றக் கூடாது
இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது. பெண்கள் பணியாற்ற வேண்டிய இருந்தால் எழுத்துபூர்வமாக சம்மதம் பெற்ற பின், பணியில் ஈடுபடுத்த வேண்டும். பணியில் இருக்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட, அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும். பணியிடங்களில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை குழு கண்டிப்பாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications