பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு: 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்கு தேவைப்படுவதால் பிளஸ் 2 மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களின் கருத்தினை கேட்டறிந்து இந்த முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்கு தேவைப்படுவதால் பிளஸ் 2 மாணவர்களின், 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண்களை வருகிற 30-ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை இயக்குனரிடமும் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications