மறு வாக்குப்பதிவு வேண்டும்.. நீதிமன்றம் வரை செல்வோம் - சீறிய அண்ணாமலை!
சென்னை: நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதால், மறுவாக்குப் பதிவு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

முறைகேடு
கோவையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சென்னையில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக கூறி திமுகவைச் சேர்ந்த இளைஞரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கோவையிலும் இதுபோன்ற சர்ச்சைகள் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், ''திமுகவின் இதற்கு முந்தைய அராஜகத்தை எல்லாம் இந்தத் தேர்தல் விஞ்சி விட்டது. கொரோனா நோயாளிக்கு என்று வரையறுக்கப்பட்ட மாலை நேரம் 5 மணி முதல் 6 மணி வரை கள்ள ஓட்டுக்காக திமுகவால் திட்டமிடப்பட்டிருந்து. இதை அறிந்து, தனி நேரம் தரப்பட வேண்டாம் என தடுத்துப் பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்தபடி திமுக குண்டர்கள் சரளமாக கள்ள ஓட்டை பதிவு செய்தனர்'' என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

பாஜக
இந்நிலையில் இன்று காலை முதல் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக மீது பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அவதூறாக பேசியதையடுத்து, அதிமுக தனியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டது. இதனால் இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. தற்போது வெளியாகியுள்ள வாக்குப்பதிவு எண்ணிக்கையின் படி 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பாஜக ஒரு இடங்களிலும் வெற்றி பெறவில்லை. 138 நகராட்சி இடங்களிலும் எதிலும் வெற்றி பெறவில்லை. பேரூராட்சிகளில் 489ல் 7 இடங்களை தற்போது வரை வென்றிருக்கிறது பாஜக.

நீதிமன்றம்
இந்நிலையில், வாக்குப்பதிவு முறையாக நடக்கவில்லை என்றும், கள்ளஓட்டுகள் அதிகமாக போடப்பட்டிருக்கிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ள ஓட்டு போடப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வழக்குத் தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications