தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74,416 வேட்பு மனு தாக்கல்..தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்றைய தினம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு பரிசீலனை நடந்து வருகிறது. அந்தந்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இதில் சரியாக நிரப்பபடாத வேட்பு மனுக்கள், முறையான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யாத வேட்பு மனுக்கள் என சில வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் மாநகராட்சி வார்டில் 14,701 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் நகராட்சிகளில் 23,354 வேட்பு மனுக்களும், பேரூராட்சிகளில் 36,361 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications