நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நிறைவு - நாளை பரிசீலனை,7ல் வேட்பாளர் பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். 7ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. மாட்டுவண்டியில் வந்தும், குதிரையில் வந்தும் எலிப்பொறியில் பணத்தை வைத்துக்கொண்டு வந்தும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள், இடபங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. இடப்பங்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி நீடித்ததால் இடப்பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று வரை பிரதான கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

பலமுனைப்போட்டி
இந்த தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும், தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி உள்ளது. தேர்தலில் களம் காணும் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஏற்பட்ட தாமதம் காரணமாக வேட்பு மனு தாக்கல் ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது. கடந்த 2ஆம் தேதி வரை 2,563 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் புதன்கிழமையன்று ஓரே நாளில் மட்டும் 7 590 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 10,153 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல்
நேற்று ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்கள் பெரும்பாலோனோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்காரணமாக தேர்தல் அலுவலகங்கள் களை கட்டின. நேற்று ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டதால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டன. வேட்பாளர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடைசி நாள்
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 5மணியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் இன்று கூட்டம் அலைமோதியது. திமுக, அதிமுக, விசிக, பாஜக என பிரதான கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

பிப்ரவரி 7 இறுதி வேட்பாளர் பட்டியல்
இன்று ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 7ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும். பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications