கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தில் சென்று வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் கேரளா தவித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் தினமும் 20,000-கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை கொடுக்கின்றன. அங்கு கொரோனா நேர்மறை சோதனை விகிதம்(பாஸிடிவ் ரேட்) தொடர்ந்து 12% ஆக இருந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.
எனது இல்ல மணவிழாவுக்கு வாருங்கள்... முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த ஜான் பாண்டியன்..!
கேரளாவில் தொற்று உச்சம்
தற்போது கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தொற்று அதிகமாகி வருவதால் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த குழு கேரளாவில் நோய் தாக்கத்திற்கான காரணம், தடுப்பதற்கான வழிகள் குறித்து மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
சோதனைச் சாவடிகளில் சோதனை
தமிழ்நாட்டை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மாவட்டம் வளையாறு, தென்காசி மாவட்டம் புளியரை, நீலகிரி மாவட்டம் கூடலுர் ஆகிய பகுதிகள் கேரள எல்லையில் பிரதானமாக அமைந்துள்ளன. கேரளாவில் இருந்து இந்த பகுதிகள் வழியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ், கொரோனா சோதனை ஆகிய மேற்கொள்ளப்பட்டே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தீவிரப்படுத்த வேண்டும்
ஆனால் மேற்கண்ட சோதனைச் சாவடிகளில் பெரும்பாலானோர் வெறும் இ-பாஸ் மட்டுமே பெற்றுக் கொண்டு அனுமதிக்கப்படுவதாகவும், ஒரு சிலருக்கே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்தன. எனவே தமிழக-கேரள எல்லையில் சோதனையை தீவிரபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்
இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தமிழக-கேரள எல்லையில் தடுப்பு நடவடிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயமாக்கப்படும்.
இவர்களுக்கு விலக்கு?
கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து 13 நிமிடங்களில் முடிவு அறிவிக்கப்படும். இந்த நடைமுறை ஓரிரு நாளில் அமலுக்கு வர உள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன பரிசோதனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது' என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.