உள்ளூரை சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.. உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் நடக்கும் பகுதிகளை சேர்ந்த ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இதற்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஈடுபட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர். எம். பாபு முருகவேல் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி 138 நகராட்சி 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த 26-ம் தேதி அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

30 ஆயிரம் அரசுப் பணியாளர்கள்
பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாகவும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 80 ஆயிரம் காவல்துறை பணியாளர்களையும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களையும் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாக தன்னுடைய செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

தபால் வாக்கு உரிமை
தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு தபால் வாக்கு உரிமை வழங்கப்படும். அதன் அடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகளை தேர்தல் நாட்களுக்கு முன்பாகவே செலுத்தி விடுவார்கள். இந்த தேர்தலை பொறுத்தவரை மிகக் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும்.

இவர்களை பணியமர்த்தக்கூடாது
இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிற அரசு அலுவலர்களும், காவல்துறை பணியாளர்களும் ஏற்கனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய அரசு அலுவலர்களையும், காவல்துறை பணியாளர்களையும் இந்த தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்களாகவும், காவல் துறை அலுவலர்களாகவும் பயன்படுத்த வேண்டும் . தேர்தல் நடக்கும் பகுதிகளை சேர்ந்த அரசு அலுவலர்களையும், காவல்துறை பணியாளர்களையும் தேர்தல் பணியில் பணியமர்த்தக்கூடாது. .

தபால் வாக்குகளில் மிகப்பெரிய முறைகேடு
தபால் வாக்கு என்ற முறையை இந்த தேர்தலில் முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும். வாக்கு எண்ணும் போது தபால் வாக்குகளில் தான் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
தபால் வாக்குகள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ளது. அதற்காக அரசுக்கு ஏற்படும் கால விரையமும், பண விரயமும் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்பதையும் காரணம் காட்டி , தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக அந்த மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதிமுக தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications